
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக ஊழியர்கள் பதிவாளர் அறையில் சம்பளம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்கவில்லை. இதனால் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஜூன் 4-ம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜூன் 5-ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் அறையில் இருந்த போது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரது அறைக்கு உள்ளே சென்று தரையில் அமர்ந்து அவரை வெளியே எங்கும் செல்லாத பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகர், ரவி, பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் தலைமையில் சம்பளம் கேட்டும் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் மற்றும் பதிவாளரை நியமிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது விரைவில் சம்பளம் வழங்குவதற்காக உயர் அதிகாரிகளிடம் பதிவாளர் பேசியுள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். 2-வது நாளாக ஆசிரியர்கள் ஊழியர்கள் சம்பளம் கேட்டு பல்கலைக்கழக பதிவாளர் அறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.