கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு மற்றும் கவுன்சிலரான சின்னசாமிக்குஇடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அந்தப் போராட்டம் நேற்று (21ம் தேதி) சென்னையில் நடந்தது. இதில் பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் என்பவரும் கலந்து கொண்டார்.
இதில் பேசிய கர்னல்பாண்டியன், “எங்களுக்கு சுடவும், குண்டு வைக்கவும் தெரியும்; தமிழக அரசை எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போராட்டம் முடிந்தபிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் கூட்டாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என புகார் மனு கொடுத்தனர். இதில், “இராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது” என்று பேசிய கர்னல்பாண்டியனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.