anna university vice chancellor chennai high court

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து, டிராபிக் ராமசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் படி, ஒருவரை இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது. சூரப்பா, கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆறு ஆண்டுகள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐ.ஐ.டி-யில் இயக்குனராக பதவி வகித்துள்ளார்.

Advertisment

2016- 2017ல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீன் பதவியையும் வகித்துள்ளார்.ஐ.ஐ.டி. இயக்குனர் பதவி என்பது, துணைவேந்தர் பதவிக்கு நிகரானது. அந்த அடிப்படையில், ஏற்கனவே இரு முறை பதவி வகித்துள்ள அவரை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளது, பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு விரோதமானது.’எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, ஐ.ஐ.டி. இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.