Skip to main content

செமஸ்டர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

  

anna university semester fee issue

 

 

செப்டம்பர் 5-ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களைச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற  அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்து படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டர் கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3-க்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5-க்குள்ளும் செலுத்த வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம், இறுதி கெடுவுக்குள் கட்டணம் செலுத்தத் தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்,  மாணவர்கள் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ம் தேதி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும் எனவும்,  அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகஸ்ட் 5-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவரது  மனுவில், கரோனா ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களின் பெற்றோர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலையில், செமஸ்டர் கட்டணத்தை செலுத்த சொல்வதா எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  செமஸ்டர் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே கல்விக் கட்டணமாகவும், மீதமுள்ளவை ஆய்வக கட்டணம், நூலக கட்டணம், கணினி மையக் கட்டணம், இணையவழி சமூக கட்டணம் போன்ற கட்டணங்களாகவும் உள்ளன. மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உள்ள நிலையில், மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தப்படுகிறது. இந்த 60 சதவீத கட்டணத்தை வசூலிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும்,  கட்டணம் செலுத்தாவிட்டால் பல்கலைக்கழக மாணவர்களை நீக்கம் செய்யும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் மனுதாரர் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதி, நாளை (4-ஆம் தேதி) இந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்