Anna University Notification date of Apply for Tancet exam

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போல், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஆண்டு முதல், பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA) எனும் புதிய தேர்வு முறையை அண்ணாபல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

அதன்படி, 2024- 2025ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய மேலாண்மை படிப்பில் சேர டான்செட் தேர்வு நடைபெறவுள்ளது. மேலும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர சீட்டா பிஜி நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் (2024) நடைபெறும் டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்த ஆண்டு வரும் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. அதனால், டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏக்கு விண்ணப்பிப்போருக்கு மார்ச் 9ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏக்கு விண்ணப்பிப்போருக்கு அதே தேதி பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். முதுநிலை பொறியியல் படிப்புக்கான சீட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுகள் மாநிலம் முழுவதும் 14 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. மேலும், டான்செட் மற்றும் சீட்டா தேர்வுக்களுக்கான விரிவான தகவல் நாளை (07-01-24) வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளது.