Skip to main content

எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்துசெய்தது அழகல்ல! - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

anna university government chennai high court order


எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல எனச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததை எதிர்த்து, இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்குப் பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்ப்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிடக் கோரிய இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

anna university government chennai high court order


அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, ‘பல்கலைக்கழக முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எந்த அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும், நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதே மனுதாரர்களின் நோக்கம்’ என வாதிட்டார்.

 

அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயக்குமார், ‘இந்த இரு பிரிவுகளுக்கு 35 ஆண்டுகளாக நிதி ஒதுக்குவதுடன், மாணவர் சேர்க்கைக்கான பட்டியலையும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்புகிறது. அதன்படி பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளித்து வருகிறது. இந்த ஆண்டு, பல்கலைக்கழகத்தையே சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்த இட ஒதுக்கீடு என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில், மனுதாரர்கள் ஏன் இத்தனை நாட்கள் மௌனம் காத்து, இப்போது வழக்கு தொடர்ந்தனர்? வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து கல்வியாண்டின் இடையில் கூட சேர்த்துக் கொள்ள முடியும்’ என விளக்கம் அளித்தார். தமிழக அரசுத் தரப்பில் மனோகரன் ஆஜராகி, வழக்கு குறித்து முழுமையாக விளக்கம் பெற்று தெரிவிக்க, இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

 

பின்னர் நீதிபதி புகழேந்தி குறுக்கிட்டு, ‘மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகமே இட ஒதுக்கீடு முறை குறித்து முடிவெடுக்க வேண்டியதுதானே? படிப்பை வழங்குவதைவிட, பணத்திற்காகப் படிப்பை ரத்து செய்தது, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? இது பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள். நிதி உதவி தேவை என்றால், தமிழக அரசை நாடுங்கள். மேலும், உயர்கல்வித்துறை செயலாளரிடம் கலந்துபேசி நல்ல முடிவெடுக்க வேண்டும். பணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. நல்ல தீர்வைக் கண்டறிந்து தெரிவியுங்கள். மருத்துவப்படிப்பில் 69% நடைமுறை கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு மட்டும், இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் ஏற்பட்டுள்ளது? மத்திய அரசு சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், பல்கலைக்கழக சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், இட ஒதுக்கீட்டை அளிக்க முடியுமா? எம்.டெக். படிப்பில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் ஒதுக்கீடு வழங்குவதா, (அல்லது) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையையும் தாங்களே நடத்துவதா என, மத்திய அரசே நடத்துவது குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்‘ என உத்தரவிட்டுள்ளார்.

 

வழக்கை பிப்ரவரி 8- ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் விளக்கத்தைக்  கேட்டபிறகு, அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.