
எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல எனச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததை எதிர்த்து, இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்குப் பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்ப்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிடக் கோரிய இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, ‘பல்கலைக்கழக முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எந்த அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும், நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதே மனுதாரர்களின் நோக்கம்’ என வாதிட்டார்.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயக்குமார், ‘இந்த இரு பிரிவுகளுக்கு 35 ஆண்டுகளாக நிதி ஒதுக்குவதுடன், மாணவர் சேர்க்கைக்கான பட்டியலையும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்புகிறது. அதன்படி பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளித்து வருகிறது. இந்த ஆண்டு, பல்கலைக்கழகத்தையே சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்த இட ஒதுக்கீடு என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில், மனுதாரர்கள் ஏன் இத்தனை நாட்கள் மௌனம் காத்து, இப்போது வழக்கு தொடர்ந்தனர்? வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து கல்வியாண்டின் இடையில் கூட சேர்த்துக் கொள்ள முடியும்’ என விளக்கம் அளித்தார். தமிழக அரசுத் தரப்பில் மனோகரன் ஆஜராகி, வழக்கு குறித்து முழுமையாக விளக்கம் பெற்று தெரிவிக்க, இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
பின்னர் நீதிபதி புகழேந்தி குறுக்கிட்டு, ‘மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகமே இட ஒதுக்கீடு முறை குறித்து முடிவெடுக்க வேண்டியதுதானே? படிப்பை வழங்குவதைவிட, பணத்திற்காகப் படிப்பை ரத்து செய்தது, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? இது பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல. துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள். நிதி உதவி தேவை என்றால், தமிழக அரசை நாடுங்கள். மேலும், உயர்கல்வித்துறை செயலாளரிடம் கலந்துபேசி நல்ல முடிவெடுக்க வேண்டும். பணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. நல்ல தீர்வைக் கண்டறிந்து தெரிவியுங்கள். மருத்துவப்படிப்பில் 69% நடைமுறை கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு மட்டும், இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் ஏற்பட்டுள்ளது? மத்திய அரசு சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், பல்கலைக்கழக சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், இட ஒதுக்கீட்டை அளிக்க முடியுமா? எம்.டெக். படிப்பில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் ஒதுக்கீடு வழங்குவதா, (அல்லது) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையையும் தாங்களே நடத்துவதா என, மத்திய அரசே நடத்துவது குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்‘ என உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை பிப்ரவரி 8- ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் விளக்கத்தைக் கேட்டபிறகு, அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.