சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று (29/07/2022) காலை 10.00 மணிக்கு, விவேகானந்தர் அரங்கத்தில் தொடங்கியது. இவ்விழாவில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேருரை நிகழ்த்துகிறார். அத்துடன், 69 மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்குகிறார். அதேபோல், இந்த விழாவிற்கு தலைமைத் தாங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
விழாவிற்கு கௌரவ விருந்தினராகப் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை நிகழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.