anna malai university chennai high court government

Advertisment

தொலைதூரக் கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சட்டப்படிப்புகள் வழங்குவதை எதிர்த்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய- மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம் மூன்றாண்டு மற்றும் இரண்டாண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல், சட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலம் நடத்துவது தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இதற்குமுன் இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை திரும்பப் பெறவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2008- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டக்கல்வி விதிகளின்படி, தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்புகளை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய- மாநில அரசுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.