Skip to main content

'அண்ணா தி.மு.க. அல்ல – அமித்ஷா தி.மு.க.வே!'-கி.வீரமணி விமர்சனம்

Published on 24/06/2025 | Edited on 24/06/2025
'Anna DMK. Not – Amit Shah DMK!'-Kee. Veeramani's criticism

இந்து முன்னணி அமைப்பின் சார்பில்  மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அண்ணா தி.மு.க.!  பி.ஜே.பி.யிடம் அடமானம் வைக்கப்பட்டதால் தற்போதுள்ளது அமித்ஷா தி.மு.க. என்பது நிரூபணமாகிவிட்டதாக திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி கண்டன விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மதுரையில் முருகன் பெயரில் மாநாடாம் – நடத்துவது இந்து முன்னணியாம். இவ்வளவு நாள்கள் இல்லாமல், இந்து முன்னணியினருக்கு தமிழ்நாட்டில் மட்டும் முருகக் கடவுள்மீது அப்படி என்ன அசாத்திய காதல்?

உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் வந்தார், அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார் போலும், வித்தைகளை! தமிழ்நாட்டில் பி.ஜே.பி., சங் பரிவார் காவிகள் கர்ணக் குட்டிக்கரணம் அடித்தாலும் பருப்பு ஒருபோதும் வேகாது!

முருகன் – அரசியலுக்கு ஒரு கைக் கருவியா? ‘‘பெரியார் என்ற ஒரு மாபெரும் மனுஷன் மக்களிடத்திலே மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு மக்கள் மத்தியிலே மதத்துக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும், சாஸ்திரங்களுக்கு எதிராகவும் புயல் வேகத்தில் எடுத்துச் சொல்லிச் சொல்லி, மக்களை மடைமாற்றம் செய்துவிட்டார்கள். அதற்கு எதிராகவெல்லாம் நம் ஜம்பம் எடுபடாது; நாமும் பல தேர்தல்களைச் சந்தித்துப் பார்த்துவிட்டோம்! விழி பிதுங்கி தோல்வி மூட்டைகளைச் சுமந்து முதுகெலும்பு முறிந்ததுதான் மிச்சம்! வேறு வழியில்லை; வடக்கே ராமனைக் காட்டி மக்களின் மதி மயக்கத்தை அறுவடை செய்ததுபோல, தமிழ்நாட்டிலும் முயற்சித்துப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முருகன்தான் கொஞ்சம் பரவலாக அடிபடும் கடவுள். அதை வைத்துக் கர்ணம் அடித்து ஒரு கை பார்க்கலாம்’’ என்று மதுரையில் அமித்ஷா தலைமையில் கூடிப் பேசி, முடிவெடுத்து இருக்கிறார்கள் போல தெரிகிறது! அதையும்தான் விட்டு வைப்பானேன்! ஒரு ‘சான்ஸ்’ பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் கூட்டப்பட்டதுதான் இந்த முருக பக்தர்கள் மாநாடு. (எஸ்.ஓ.எஸ்.)

ஒன்றை அவர்கள் மறந்துவிட்டார்கள். தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராக முருகன் என்ற பெயரில் ஒருவர் இருந்தார். திருத்தணியில் இருந்து புறப்பட்டு (2020, நவம்பர் 4) திருச்செந்தூரில் நடை பயணத்தை முடித்தார் (2020, டிசம்பர் 5). பலன் என்ன? தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், நீலகிரி மக்களவைத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியதுதானே மிச்சம்? அப்பொழுதாவது புத்தி கொள்முதல் பெற்றிருக்கவேண்டும்.

nn

மதுரையில் மாநாடு நடத்தினார்கள் – முருகன் ப(ச)க்தியால் அல்ல! நீதிமன்ற உத்தரவால்தான் அந்த மாநாட்டை நடத்த முடிந்தது. உயர்நீதிமன்றம் வைத்த நிபந்தனைகளை மாநாட்டில் கடைப்பிடித்தனரா? சட்டத்தை எந்தக் காலத்தில் மதித்தார்கள்?

அவர்கள் கற்றதெல்லாம் கலாட்டா செய்வதும், சட்ட மீறலும்தானே! உயர்நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது? பட்டப் பகலில், பெரிய தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள். அந்த இடத்தில் இராமன் கோவில் கட்டியவர்கள்தானே ஒன்றிய ஆட்சியின் அதிகாரப் பீடத்தில் அட்டகாசமாக அட்டாணிக்கால் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். (அந்தோ பரிதாபம், அந்த அயோத்தி தொகுதியிலேயே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தோற்ற பரிதாபத்தை என்ன சொல்ல!).

ஆட்சி சாதனைகளைச் சொல்லி, மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சி நடத்த வக்கில்லாதவர்கள், மக்களைத் திசை திருப்ப, மக்கள் மத்தியில் ஆண்டாண்டுக் காலமாக ஆரியத்தால் வேர்ப் பிடித்துக் கிடந்த பக்தியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி, வாக்குகளைப் பறித்தார்கள்.

அவர்களின் செய்தி தெரிந்த கதைதான்! அதேநேரத்தில் அண்ணா பெயரையும், ‘திராவிட’ப் பெயரையும் கட்சியிலும், கட்சிக் கொடியிலும் பொறித்துக் கொண்டிருக்கும் அண்ணா தி.மு.க. – அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான பார்ப்பனீய விஷத்தின் அசல் பதிப்பான – ஆர்.எஸ்.எஸ். நாகம் குட்டிப் போட்ட பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி விரித்த வலையில், வேரோடு வீழ்ந்து சிக்கிக் கொண்ட கேவலத்தை என்ன சொல்ல!

‘‘திராவிடம் இல்லாத ஆட்சியை அமைப்போம்’’ என்று சொன்னவர்கள்தானே பி.ஜே.பி.யினர்! இவ்வளவுக்கும் இவர்கள் கூட்டுச் சேர்ந்துள்ள பி.ஜே.பி. நேற்று வரைக்கும் ‘‘திராவிடம் இல்லாத ஆட்சியை அமைப்போம்’’ என்று சொன்னவர்களின் ‘பாதார விந்தங்களில்’ சாஷ்டாங்கமாக விழுந்து கிடைப்பதை எண்ணும்போது, உண்மையான திராவிட இயக்கத்தை உணர்ந்தவர்கள், அறிஞர் அண்ணாவின் ஆழமான திராவிட இயக்க உணர்வையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் படித்தவர்கள், கேட்டவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கல்லவா கேவலத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள்!

மதுரையில் இந்து முன்னணியினர் நடத்திய மாநாட்டில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி .பழனிசாமியின் ஆசீர்வாதத்தோடு கலந்துகொண்ட அ.தி.மு.க.வினர் மூக்கறுபட்டதுதானே மிச்சம்!

‘‘மதுரையில் நடத்தப்படும் மாநாடு அரசியல் சார்பற்றது – பக்தி மயமானது மட்டுமே’’ என்று சொன்னவர்கள் – வழக்கம்போல, அறிவு நாணயமற்ற வகையில், அரசியல் நெடி வெடிக்கும் அளவுக்குத் தீர்மானம் நிறைவேற்றியது ஒருபுறம் இருக்கட்டும். (இதுகுறித்து நீதிமன்ற நிபந்தனைக்கு மாறாக நடந்துகொண்டதால், நீதிமன்றமே முன்வந்து நிபந்தனைகளை மீறியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா?)

2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி என்று முடிவு செய்த நிலையில், அண்ணா தி.மு.க. மதிப்பதாகக் கூறும் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் வகையில் காணொலிக் காட்சிகள் இடம்பெறுகின்றன என்றால், பி.ஜே.பி., அ.தி.மு.க.வினரை எந்த அளவுக்கு அலட்சியப்படுத்துகிறார்கள், எட்டி உதைக்கின்ற நிலைபோல என்பது விளங்கவில்லையா?

எஸ்.டி.பி.அய். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

இஸ்லாமியர்கள் (எஸ்.டி.பி.அய்.) நடத்திய மாநாட்டில் பங்குகொண்டு,  ‘‘2026 தேர்தலில் மட்டுமல்ல, இனி எந்தக் காலகட்டத்திலும் பி.ஜே.பி.யோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு மதுரை முருகன் மாநாட்டுக்கு வாழ்த்துச் சொல்லுவதும், மேனாள் அ.தி.மு.க. அமைச்சர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைப்பதைவிடக் கேடு கெட்டத்தனம் ஒன்று இருக்க முடியுமா?

இடையில் நடந்தது என்ன? பேரமா, ரெய்டுகள் அச்சுறுத்தலா? தேர்தல் சின்னம் பிரச்சினையா?

பாமர மக்களும் அறியமாட்டார்களா? தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தினார்கள் என்ற தகவல் வெளியில் வந்த நிலையில், கடும் விமர்சனப் புயல் – சுழன்றடிக்கும் சூறாவளிப் புயலின் வீச்சைத் தாங்க முடியாமல், மாநாட்டில் பங்கேற்ற மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர்,

‘பாம்புக்கும் நோகாமல், பாம்படித்த கொம்புக்கும் நோகாமல்’, ‘‘பெரியார், அண்ணாவை விமர்சித்த வீடியோ ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது; தலைவர்களை சிறுமைப்படுத்தும் நிகழ்வாக பயன்படுத்தியது தவறு. அவை நாகரிகம் கருதி, எதிர்க்கவில்லை’’ என்று மயிலிறகால் வருடுகிறார். காரணம், மோடி அவருக்கு ‘டாடி!’

எந்த அளவுக்குப் பி.ஜே.பி.யின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி எல்லாவற்றையும் துறந்தவர்களாகி விட்டார்கள் என்பது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தியதற்குப் பிறகும்,

ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கெ(ா)ஞ்சுவது ஏன்?

இதில் என்ன கொடுமை என்றால், இந்த அவமானம், சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சி நடந்ததற்குப் பிறகு, மறுநாள் (23.6.2025) கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டு விழாவில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேனாள் அமைச்சர் வேலுமணி, தன் சகோதரருடன் பங்கேற்றதுடன், ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார். அவரது சகோதரர் முருகனின் வேல் ஒன்றையும் பரிசளித்தார் என்றால், இதன் பொருள் என்ன? இதைவிட பச்சை சரணாகதி வேறு உண்டா?

தந்தை பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்திய பிறகும், ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் கெ(ா)ஞ்சுவது ஏன்?

22.6.2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவைக் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட பிறகு, அ.தி.மு.க.வின் மேனாள் மூத்த அமைச்சர் அடுத்த நாளே இப்படி நடந்துகொள்கிறார் என்றால், அவர்களுக்குக் கொள்கை முக்கியம் அல்ல – திராவிட இயக்கத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் இழிவுப்படுத்தப்படுவது ஒரு பொருட்டல்ல – தங்களின் அளவிட முடியாத சுயநலம், பல்வகையான பாதுகாப்புகள்தான் முக்கியமானது – முதன்மையானது என்று பட்டாங்கமாய்ப் பளிச்சிடவில்லையா?

மதுரை முருகன் மாநாட்டுக்குச் செல்லும் அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சால்வை, மாலைகள் சூட்டி அணி செய்து, முருகனுக்குரிய வேலையும் நினைவுப் பரிசாகக் கொடுத்தார்கள் என்றால், இவர்களின் பரிசும், பவிசும் இத்தகைய சப்பையான கொள்கைப்பற்றைத்தான் அம்பலப்படுத்துகிறது.

அண்ணா தி.மு.க. அல்ல – அமித்ஷா தி.மு.க.வே!

இவ்வளவும் நடந்து முடிந்து, மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளான நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டு, கண்டன அறிக்கை வெளியிடத் துப்பின்றி, அ.தி.மு.க. அய்.டி. விங் என்ற போர்வையில், ‘‘அ.தி.மு.க. கண்டனம்’’ என்ற பெயரில் ஒப்புக்காக ஒரு நான்கு வரி அறிக்கை வெளிவருகிறது.

‘‘முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாபற்றி வெளியிடப்பட்ட வீடியோவை துளியும் ஏற்றுக் கொள்ள முடியாது. அ.தி.மு.க. சார்பில் கடுமையான கண்டனம்’’ என்பதுதான் அந்தத் துக்கடா அறிக்கை!

அண்ணா தி.மு.க.வில், அண்ணாமீதும், திராவிடத்தின்மீதும் உண்மையிலேயே ஆழமான பற்றும், மதிப்பும் உள்ளவர்கள் யாரேனும் தப்பித் தவறியிருந்தால், கட்சிக்குள் கலகக்குரல் எழுப்ப வேண்டாமா? குறைந்தபட்சம் வெளியேற வேண்டாமா?
அமித்ஷா மு(பி)ன்னேற்றக் கழகம் என்று
பெயர் சூட்டிக் கொள்வது உத்தமம்!

கடைசியாக ஒரு வேண்டுகோள்:

பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இருந்து ‘‘அண்ணா’’வின் பெயரையும், ‘‘திராவிட’’ என்ற பண்பாட்டு அடையாள வரலாற்றையும் அறவே நீக்கிவிட்டு, ‘‘அமித்ஷா மு(பி)ன்னேற்றக் கழகம்’’ என்று பெயர் சூட்டிக் கொள்வது உத்தமமானது!

‘‘கரடியைக் கம்பளி மூட்டை’’ என்று கட்டிக் கொண்டவர் கதைதான் பி.ஜே.பி.யுடன் ஆலிங்கனக் கூட்டணிச் சேர்ந்தவரின் கதையும்!

இது கல்லின் மேல் எழுத்து!

தமிழ்நாட்டு மக்கள் இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; எதிர்க்கட்சித் தகுதியும் பறிபோகும் நிலையே இனி ஏற்படும்!' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்