Skip to main content

அனிதா ராதாகிருஷ்ணன் போலீசில் பரபரப்பு புகார்... திமுகவில் பரபரப்பு...

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

MLA Anitha radhakrishnan

 

திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் சமூக வலைதளங்களின் மூலமாக சுபாஷ் பண்ணையார் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். என் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசுகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

 

எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் இது குறித்து நாம் பேசியதில், “தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான நிவாரணமும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்று எனது தலைமையில் தட்டார்மடத்தில் கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து சொக்கன்குடியிருப்பில் நடந்த போராட்டத்தில் நான் இருந்தபோது எனது தண்டுப்பத்து வீட்டின் முன்னே நிறுத்தப்பட்டிருந்த எனது காரை பனங்காட்டுப் படையைச் சேர்ந்தவர்கள் அடித்து உடைத்துள்ளனர். அதில் தொடர்புடைய இரண்டு நபர்கள் போலீஸ் விசாரணையில் உள்ளனர். அது குறித்து வழக்கும் உள்ளது.

 

Anitha radhakrishnan - Thiruchendur - dmk - MLA
                                                    சுபாஷ் பண்ணையார்

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயமும், நிவாரணமும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கையோடு தி.மு.க போராட்டம் நடத்தியது. ஆனால் பனங்காட்டுப் படையினரோ உடலை வாங்குங்கள் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சமாதானம் செய்தது. அதை நான் சுட்டிக் காட்டினேன். நாங்கள் இடைஞ்சலாக இருக்கிறோம் என்று கருதினார்கள். அதன் பிறகே கடந்த 23ஆம் தேதியன்று மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் சமூக வலைதளங்களில் என்னை மிரட்டும் வகையிலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் பேசியுள்ளார். எனவே என் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்புத் தரும்படியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளேன்.” என்றார் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.