Ani Thirumanjana Chariot Festival in Nataraja Temple

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு ஆனி திருமஞ்சனம் என்றும், மார்கழி மாதத்தில் நடைபெறும் விழாவிற்கு ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா ஆகும்.

இந்நிலையில் ஆனி மாதத்திற்கான ஆனித் திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் பஞ்ச மூர்த்தி சாமி சிலைகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 11-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சித்சபையில் (கருவறை) இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி சாமி சிலைகள் ஊர்வலமாக கோவிலில் இருந்து பக்தர்கள் தோளில் தூக்கியவாறு எடுத்துவரப்பட்டு காலை 6 மணிக்கு தேரில் ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து தேர் திருவிழா காலை 8 மணிக்கு மேல் தொடங்கியது. தேர் சிதம்பரம் நகரில் முக்கிய வீதிகளான கீழவீதி தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக சென்று இன்று மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தேர் நிலையை அடையும். தேர் தெருக்களில் செல்லும் போது நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தேருக்கு தல 2 கிராம் தங்கக் காசு கொடுத்து பல்வேறு தரப்பினர் மண்டகப்படி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தேரில் இருந்து சாமி சிலைகள் இறக்கப்பட்டு பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து இரவு லட்சார்ச்சனை நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து 4 மணிக்குள் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும்.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும். உலக நாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.