Skip to main content

போலீசார் எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

andhra pradesh real estate agent police incident in dharmapuri 

 

ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீசார் எனக் கூறி மர்ம நபர்கள் நான்கு பேர், நில தரகர்கள் இருவர் என கூட்டு சேர்ந்து நூதன முறையில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பூமா செட்டி (வயது 60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் நிலம் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள நில தரகர்களை அணுகியுள்ளார். அதற்கு நில தரகர்கள் அதியமான் கோட்டையில் புறவடை ஜங்ஷன் அருகே நிலம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நிலங்களைக் காட்டியுள்ளனர். அந்தப் பகுதியில் ஒரு நிலத்தைப் பார்த்த பூமா செட்டி, அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தார். மேலும், நிலத்தை கிரயம் செய்யும்போது பணத்தை கொடுப்பதாகக் கூறிவிட்டு ஹைதராபாத்துக்கு திரும்பினார்.

 

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பூமா செட்டியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நில தரகர்கள், 4ம் தேதி கிரயம் செய்து கொள்ளலாம் என்றும் 30 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு தர்மபுரிக்கு வருமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து நில தரகர்கள் சொன்னபடியே பணத்தை எடுத்துக்கொண்டு பூமா செட்டி மற்றும் அவருடைய உறவினர் பூமாசெட்டி பாபு (வயது 52) ஆகியோர் தர்மபுரிக்கு வந்தனர். அவர்களை நில தரகர்கள் இருவர் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறவடை ஜங்ஷன் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் நான்கு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள், நில தரகர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது பூமா செட்டி வைத்திருந்த பெட்டியில் 30 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது.

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் அங்குதான் பணத்தை எடுத்துச் செல்வதாக கூறிய அவர்கள், பூமா செட்டியையும் அவருடன் வந்த பூமா செட்டி பாபுவையும் காரை விட்டு கீழே இறங்கும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்ட மர்ம நபர்கள், நில தரகர்களுடன் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமா செட்டி, இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரே இல்லை என்பதும் நில தரகர்களும், போலி போலீசாரும் கூட்டு சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பூமா செட்டியிடம் தொலைபேசியில் பேசிய நில தரகர்களின் தொலைபேசி எண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.