Andhra family who cheated woman doctor by pretending to be CBI officer

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரை கடந்த ஜூலை 29ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், டெல்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாகவும், உங்கள் முகவரியில் இருந்து மலேசியாவிற்கு மெத்தபெட்டமின் போதைப் பொருள், போலி பாஸ்போர்ட்டுகள், ஏ.டி.எம்., கார்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., அலுவலகத்திற்குப் புகார் வந்துள்ளது. விசாரணைக்கு நீங்கள் டில்லிக்கு வர வேண்டும். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தான் கூறும் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்புமாறு கூறினார்.

அச்சமடைந்த பெண் மருத்துவர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு 6 தவணைகளாக ரூ.38.69 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பிறகும் பணம் கேட்டு மிரட்டியதால், கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் அப்புதுரை தலைமையிலான போலீசார், மர்ம ஆசாமியின் மொபைல் எண், பணம் அனுப்பிய வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், இந்த மோசடி ஆந்திரா மாநிலம், கோனசீமா மாவட்டம், அம்பாஜிபேட் இருசுமுன்டா மண்டல், பிரசாத் ராவ், அவரது தந்தை சத்தியநாராயணா, தாய் ரமாதேவி, மனைவி அருணா குமாரி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பெண் மருத்துவரிடம், சி.பி.ஐ அதிகாரி எனக் கூறி பணத்தை மோசடி தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ஆந்திரா சென்று, பிரசாத் ராவ், 33; என்பவரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது தந்தை, தாய், மனைவி ஆகிய மூவரைத் தேடிவருகின்றனர்.