Skip to main content

நீ 5, நான் 10... போட்டிப்போடும் தமிழக, ஆந்திர அதிகாரிகள்... அவதிப்படும் மக்கள்...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

andhra and tamilnadu officers seized buses

 

தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அந்த மாநில போக்குவரத்துக் கழகங்களும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கிவருகின்றன. இந்த மாநிலங்களில் இயங்கும் சில தனியார் பேருந்துகளும் அருகில் உள்ள மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றன.

 

இதற்காக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அமர்ந்து பேசி ஒருநாளைக்கு இத்தனை பேருந்துகள் எங்கள் மாநிலத்திலிருந்து உங்கள் மாநிலத்துக்கு வரும் எனப் பேருந்துகளின் எண், நேரம் ஆகியவை அடங்கிய பட்டியலைத் தந்து அனுமதி பெறுவார்கள். அதேபோல் அந்தந்த மாநில போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பேருந்துகளின் பதிவு எண், நேரம் போன்றவற்றைத் தந்து அனுமதி பெறுவார்கள். பேருந்துகள் இயங்கிவரும். முக்கியமான நில நாட்களில் அதாவது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு மற்றும் சில முக்கிய பண்டிகைகளின் போது இந்த மாநில போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்கும். அதற்கு அனுமதி பெறுவார்கள், சிலசமயம் அனுமதி பெறாமலும் இயக்குவார்கள். 

 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிறந்த ஊரை விட்டு பிற மாநிலங்களில் வேலை செய்பவர்கள், தங்களது ஊருக்குப் போவதும், வருவதுமாக உள்ளார்கள். இதில் சில பேருந்துகள் பர்மிட் இல்லாமல் மாநில எல்லையைத் தாண்டிப் போய் வந்துள்ளன. 

 

ஜனவரி 14 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஆந்திராவிலிருந்து வந்த 5 அரசு பேருந்துகள் உரிமம் பெறாமல் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் சென்றன என தமிழக போக்குவரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களது கோட்ட அதிகாரிகளுக்கு செல்போன் வழியாகத் தகவல் தந்தனர்.

 

இதுகுறித்த பேச்சுவார்த்தை அதிகாரிகள் மட்டத்தில் நடந்துள்ளது, அபராதம் கட்டிவிட்டு வண்டிகளை எடுத்துச்செல்லச்சொல்லுங்கள் எனத் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது ஆந்திரா அதிகாரிகளுக்குக் கோபத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை சுமூகமற்ற முறையில் முடிந்துள்ளன.

 

இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, குப்பம், பலமனேரி நகருக்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்தை ஆந்திரா போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

இந்த தகவல் தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த அவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஆந்திரா அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் பேசியபோது, அபராதம் கட்டிவிட்டு வண்டியை எடுத்துச்செல்லுங்கள் எனப் பதில் தந்துள்ளனர்.

 

இந்த ஏட்டிக்கு போட்டி செயல்பாடுகளால் பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இரண்டு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.