ADVERTISEMENT

“மீண்டும் இங்கேதான் கட்டுவேன் என்று சீண்டிப் பார்க்காதீர்கள்..” - அன்புமணி

11:31 AM Feb 27, 2024 | ArunPrakash

கடலூர் மாவட்டம் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சன் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ADVERTISEMENT

இதில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நான் இன்று வள்ளலார் சபைக்குச் சென்று குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தேன். 157 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதி மக்கள் இந்த இடத்தை வழங்கினார்கள். ஆனால் தற்போது இதில் சர்வதேச மையம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுக கொள்கைக்கும் வள்ளலாருக்கும் என்ன சம்பந்தம்? வள்ளலார் கொள்கைக்கு எதிராக கஞ்சா போதைப் பொருட்கள் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல குடும்பங்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளது. இங்கு பெருவழியில் சர்வதேச மையம் அமைக்க 100 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ADVERTISEMENT

இதனை சென்னையில் கட்டினால் உலகம் முழுக்க வள்ளலார் புகழ் ஓங்கி நிற்கும்; மீண்டும் இங்கேதான் கட்டுவேன் என்று சீண்டிப் பார்க்காதீர்கள். நீங்கள் நன்றாக இருக்கணும். அப்புறமா நாங்க ஒன்றும் செய்ய முடியாது. இதை இப்படி தான் சொல்ல முடியும்; புரிந்து கொள்ளுங்கள். 40 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணை காக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற கட்சி எல்லாம் தேர்தல் வெற்றிக்காக போராடுவார்கள். நாம்தான் மண்ணையும், மக்களையும் காக்க போராடி வருகிறோம். என்எல்சியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க யாராவது வாய்திறந்தால் சும்மா இருக்க மாட்டோம்.

தற்போது தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் தடை செய்துள்ளீர்கள். பஞ்சுமிட்டாயை விட பல்லாயிரம் மடங்கு போதைகள் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதை ஏன் தடுக்க மாட்டீர்கள். ஏனென்றால் அதன் மூலம் உங்களுக்கு லாபம் வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உங்களுக்கு என்ன பிரச்சனை. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். மூத்த தலைவர் கலைஞர் அவரது நினைவிடத்தை நேற்று தமிழக முதல்வர் திறப்பதில் நான் கலந்து கொள்வதாக இருந்தேன். இந்த கூட்டத்தால் கலந்து கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் வன்னியர்கள் வளர்ச்சி அடைந்ததாக தமிழக சட்டசபையில் தவறான கருத்தை அமைச்சர்கள் கூறுகிறார்கள். இது மோசடி ஏமாற்று வேலை.

திமுக சமூகநீதி பற்றி பேச தகுதியற்றவர்கள். இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு பறவைகள் வருகிறது என கணக்கெடுப்பு நடத்துகிறீர்கள் ஆனால் எத்தனை மனிதர்கள் உள்ளார்கள் என சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் உங்களுக்கு தயக்கம். தமிழகத்தில் இரு கட்சிகளும் தடுப்பணையை கட்ட மாட்டார்கள்; ஏனென்றால் மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதற்காக தான்” என பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு 77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சர்வதேச மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை கடுமையாக எதிர்த்தாலும் எங்களது நோக்கம் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் உள்ள பெருவெளியில் எந்தக் கட்டுமானங்களும் இருக்கக் கூடாது. வள்ளலாரின் கனவு அப்படியே இருக்க வேண்டும். அதுதான் அவரது எண்ணமும் கூட. வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளிக்கு அருகில் உள்ள இடத்தில் 500 அல்லது 1000 ஏக்கர் இடத்தை எடுத்து அமைக்க வேண்டும். இதனால் வள்ளலார் புகழ் அதிகமாக பரவும். வள்ளலார் வாழ்ந்த இந்த மண்ணை தமிழக அரசு எந்த விதத்திலும் சிதைக்கக் கூடாது. சமீபத்தில் இங்கு தைப்பூசம் நடைபெற்றது. இதில் 10 லட்சத்திற்கு மேல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு என்னோட பணிவான வேண்டுகோள் இது. மக்களின் 100 சதவீத விருப்பம் இந்த பகுதியில் எந்த ஒரு கட்டுமானமும் இருக்கக் கூடாது. புனிதமான இடம் புனிதமாக இருக்க வேண்டும். மக்களை எதிர்த்தும், மக்கள் கருத்தை எதிர்த்தும் இங்கு சர்வதேச மையம் வரக்கூடாது.

பாராளுமன்றத்தேர்தலில் பாமக நிலைப்பாடு தொடர்பாக தினமும் செய்திகள் வெளிவருகின்றது. அத்தனை செய்திகளும் பொய்யானவை, வதந்திகள். ஊடகம் ஒரு புனிதமான துறை; அதனை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஓரிரு வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி முடிவுகள் வெளியாகும். எங்களை பற்றி செய்தி திரித்து வெளியிடாதீர்கள் உங்களுடைய அவசரத்திற்கு எங்களால் செயல்படமுடியாது. புகழ்பெற்ற ஊடகங்களும் இதில் அடங்கும். ஊடகத்திற்கு என்ன அவசரம். கூட்டணி என்பது திடீரென முடிவாவது அல்ல..அது பல கட்சிகளை சார்ந்தது ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT