Skip to main content

பெயர் மாற்றம் தண்ணீர் தராது;அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமே தீர்வு-அன்புமணி ராமதாஸ்

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியதிற்கு பதிலாக ''ஆணையம்'' என்ற பெயரையும் மேலும் அந்த ஆணையமானது டெல்லியை தலைமையிடமாக செயல்பட பரிந்துரைத்து திருத்தப்பட்ட செயல்வரைவு திட்டத்தை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த செயல்வரைவு திட்டத்தின் மீதான தீர்ப்பு நாளை 4 மணி வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மத்திய அரசின் இந்த திருத்தப்பட்ட செயல் வரைவு திட்டம் குறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

  

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை  உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. வரைவுத் திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றால் பயனில்லை.

 

pmk

 

மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்படும்; காவிரி நீர்ப்பகிர்வு குறித்த சிக்கலில் ஆணையத்தின் முடிவே இறுதியானது;  மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூவுக்கு பதிலாக தில்லியில் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் அனைத்தும் மத்திய அரசு தானாக முன்வந்து செய்தவை அல்ல. மாறாக, உச்சநீதிமன்ற ஆணைப்படி செய்யப்பட்ட திருத்தங்கள் தான் இவை. இவற்றில் காவிரி ஆணையத்தின் தலைமை அலுவலகம் தில்லியில் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கர்நாடகத்தில் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தால், ஆணையத்தில் பணியாற்றும் வல்லுனர்களும், அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கும். இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் மற்ற இரு திருத்தங்களும் தமிழகத்திற்கு சாதகமானவை போன்று தோன்றினாலும்  அது உண்மையல்ல. புதிய அமைப்பு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல... அவற்றுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமாகும். காவிரி அமைப்புக்கு ஆணையம் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது? என்பது தான் வினா. காவிரி பிரச்சினையில் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது  என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், காவிரி ஆணையத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும் அதை செயல்படுத்தும் அதிகாரம் இருந்தாலும் கூட, செயல்படுத்தும் அதிகாரம் இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? அத்தகைய சூழலில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

 

உதாரணமாக, அடுத்த மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கர்நாடகம் சுமார் 134 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 மாதங்களில் கர்நாடக அணைகளில் ஒட்டுமொத்தமாகவே 200 டி.எம்.சி தான் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில் தமிழகத்திற்கு 80 டி.எம்.சி அல்லது 100 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு தான் உண்டு என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. அவ்வாறு ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் போது அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி. கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பது தான் எதார்த்தம்.கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இந்த ஆணையத்தின் முடிவை மதிக்குமா?
 

pmk

 

அதேநேரத்தில் காவிரி ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் இருந்தால், இந்த முடிவை ஆணையமே செயல்படுத்தும். அப்போது தமிழகத்திற்கு நியாயமான அளவில் தண்ணீரும் கிடைக்கும். இத்தகையத் தீர்வைத் தான் தமிழக மக்களும், விவசாயிகளும் கோருகிறார்கள். காவிரி நடுவர் மன்றமும் இதே தீர்வைத் தான் வழங்கியது. ஆனால், மத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இப்படி எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி விட்டு, அதற்கு பெயரை மட்டும் கவர்ச்சிகரமாக சூட்டினால் என்ன பயன்? அரளிப் பூவுக்கு ரோஜா என்று பெயர் மட்டும் சூட்டினால் அதை எப்படி தலையில் சூட்டிக்கொள்ள முடியாதோ, அதேபோல் தான் புதிய அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் சூட்டினால் மட்டும் காவிரி நீர் வந்து விடாது.

 

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை விட மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் இனி எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது  காவிரி நடுவர் மன்றம் அறிவித்தது போன்ற அனைத்து அதிகாரங்களுடன் கூடிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். காவிரி நடுவர் மன்றம் அறிவுறுத்தியவாறு திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதுகுறித்து வாதிட அனுமதி மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

 

எனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்குக் குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்சநீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.