Skip to main content

கனவு நனவாகியது... ஓய மாட்டேன்... அன்புமணி ராமதாஸ் 

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
anbumani ramadoss



தருமபுரி மக்களின் கனவு நனவாகியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மொரப்பூர் தொடர்வண்டித் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.
 

ஒரு மாநிலத்தின் தலைநகரமும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களும் தொடர்வண்டிப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கட்டமைப்புத் தேவை ஆகும். தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த மீதமுள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களின் தலைநகரங்கள் சென்னையுடன் தொடர்வண்டி மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மற்றும் தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகரமான கிருஷ்ணகிரி  ஆகியவற்றுக்கு மட்டும் தான் சென்னையிலிருந்து நேரடித் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவில்லை.
 

தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ நீளத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டிப் பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே இந்தப் பாதைக்கு சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால், அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்தன.
 

2014-ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக பதவி வகித்த சதானந்த கவுடா, சுரேஷ் பிரபு ஆகியோரையும், இப்போது தொடர்வண்டி அமைச்சராக உள்ள பியுஷ் கோயலையும், தொடர்வண்டித்துறை அதிகாரிகளையும் 18 முறை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பயனாக தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டித் திட்டம் 2016-17 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் சேர்க்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் வருவாய் விகிதம் -5.60% ஆக இருக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்தன. இத்திட்டத்தை மத்திய - மாநில கூட்டு முயற்சியில் செயல்படுத்தலாம் என்றும், அதற்கான செலவை தலா 50% என்ற அளவில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு தொடர்வண்டி அமைச்சர் கடிதம் எழுதினார்.
 

ஆனால், அதற்கு தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கமாக வருவாய் விகிதம் எதிர்மறையாக உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அத்தகையத் திட்டங்களை தொடர்வண்டித்துறை செயல்படுத்தாது. எனினும், தொடர்வண்டித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நான் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தருமபுரி - மொரப்பூர்  தொடர்வண்டித் திட்டத்துக்கு தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தமிழக அரசு கடந்த திசம்பர் 6-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அதாவது 16.01.2019 அன்று இத்திட்டத்திற்கு தொடர்வண்டித்துறை  அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்வண்டி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். மாநில அரசு நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில்,  எனது கோரிக்கையை பரிசீலித்து சாதனை கால அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 

அடுத்தக்கட்டமாக, இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும். அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துவேன். இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நிறைவேறியிருக்கிறது. மொரப்பூருக்கும், தருமபுரிக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் 1906-ஆம் ஆண்டு முதல் 1941-ஆம் ஆண்டு வரை குறுகியப் பாதையில் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. அதன்பின் இப்போது தான் இந்த வழித்தடத்தில் மின்சார தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவுள்ளது.
 

ரூ.358 கோடியில் 36 கி.மீ தொலைவுக்கு இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தி முடிக்க முடியும். அதன்பின்னர் தருமபுரி மக்கள் சென்னைக்கு நேரடியாக தொடர்வண்டியில் பயணிக்க முடியும். இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் நான் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் வரை நான் ஓய மாட்டேன். தருமபுரி- மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் விஷயத்தில் தருமபுரி மாவட்ட மக்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.