Skip to main content

மத்திய ஆசிரியர் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை நீக்கி இந்தியை திணிப்பதா? அன்புமணி இராமதாஸ் கேள்வி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

மத்திய ஆசிரியர் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை நீக்கி இந்தியை திணிப்பதா? என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழி வாய்ப்புகள் பட்டியலில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் கண்டிக்கத்தக்கது.
 

தமிழக அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதைப் போலவே, கேந்திரிய வித்தியாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளிலும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பல்வேறு மாநிலங்களின் அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியில் சேர முடியும். மொத்தம் இரு தாள்களைக் கொண்ட இத்தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒன்று முதல் ஐந்து வரையிலான தொடக்க நிலை வகுப்புகளுக்கும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் நடுநிலை வகுப்புகளுக்கும் ஆசிரியராக பணியில் சேர தகுதி பெற முடியும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில்  இரு மொழிப் பாடங்கள் உட்பட மொத்தம் 5 பிரிவுகளில் இருந்து தலா 30 மதிப்பெண்களுக்கு வினா எழுப்பப்படும். 90 மதிப்பெண்களுக்கும் கூடுதலாக பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

 

மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை எட்டாவது அட்டவணையில் உள்ள 22 இந்திய மொழிகளில் 19 மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 20 மொழிகளில் இருந்து ஏதேனும் இரு  மொழிகளை தேர்ந்தெடுத்து இத்தேர்வுகளில் பங்கேற்க முடியும். வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்  முதலாவது மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாவது மொழியாக தமிழையும் தேர்வு செய்து வந்தனர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் தாய்மொழியுடன் ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து   இத்தேர்வுகளை எழுதி வந்தனர். ஆனால், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளை இந்தப் பட்டியலில் இருந்து நீக்கி விட்ட சி.பி.எஸ்.இ கல்வி வாரியம், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஏதேனும் இரு மொழிகளை தேர்ந்தெடுத்து அவற்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்பது ஒருபுறமிருக்க, தமிழ் மொழி பேசும் மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சதியுமாகும்.
 


 

Does 17 languages, including Tamil, impose Hindi?


 

சி.பி.எஸ்.இ நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிகளின்படி, தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் தங்கள் தாய்மொழியைத் தேர்வு செய்து தேர்வெழுத முடியாது. இரு மொழிப்பாடங்களில் ஒன்றில் மட்டுமே ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுத முடியும். இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இரண்டாம் தாளை எழுத முடியாது என்பதால் அதற்குரிய 30 மதிப்பெண்களை இழப்பார்கள். அதேநேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்  தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதி அதற்குரிய 30 மதிப்பெண்களை எளிதாக எடுத்து விடுவார்கள். அத்தகைய சூழலில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 150&க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெறும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 120&க்கு 90 மதிப்பெண்களை எடுத்தால் தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும்.
 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14,15,16 உள்ளிட்ட பிரிவுகள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப் படுவதை உறுதி செய்கின்றன. ஆனால், சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் புதிய நிலைப்பாடு இந்தப் பிரிவுகளுக்கு எதிரானது ஆகும். அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள வாய்ப்புகளை மத்திய அரசும், மத்திய இடைநிலை கல்வி வாரியமும் திட்டமிட்டு பறிப்பதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழி வாய்ப்புப் பட்டியலில் இருந்து இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைத் தவிர மற்ற மாநில மொழிகளை நீக்கி விட்டால், அந்த மாநில மொழிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது. இது கொடூரமான மொழித் திணிப்பாகும்.
 

மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளிலிருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சிகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், மத்திய அரசுப் பணி தேவை என்றால் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயம் தேவை  என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசுத் துடிக்கிறது. அதன்காரணமாகவே கடந்த மாதம் வெளியிடப்பட்ட  இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு இந்தி கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, இப்போது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கியுள்ளது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும்.
 

எனவே, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழிப்பாட வாய்ப்புப் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட ஏற்கனவே இருந்த 20 மொழிகளும் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி & சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் வெடிப்பதை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.