Skip to main content

   காவிரி டெல்டாவில் மேலும் 104 எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது! அன்புமணி

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

 


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை   ’’இராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

 

a

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்களை இப்போது எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளை  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வகையில் தான் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 104 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்க தீர்மானித்துள்ள ஓ.என்.ஜி.சி, அதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.

 

 

காவிரி பாசன மாவட்டங்கள் ஏற்கனவே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், இப்போது புதிதாக செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும். ஓ.என்.ஜி.சி அமைக்கவுள்ள 104 கிணறுகளில் 87 கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெயும், 17 கிணறுகளில் இருந்து இயற்கை எரிவாயுவும்  தோண்டி எடுக்கப்படவுள்ளது. இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் அனைத்து காவிரி பாசன மாவட்டங்களிலும் விவசாயமும், நீர் ஆதாரங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

 

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 200-க்கும் கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கதிராமங்கலம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சந்திப்பு பயணம் சென்ற போது, இந்த பாதிப்புகளை என்னால் நேரடியாக பார்க்க முடிந்தது. இத்தகைய சூழலில் மேலும் 104 கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத்தகுதியற்ற மாவட்டங்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

 

உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் கூட மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் தான் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை... தங்களின் வருவாய் அதிகரித்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் தனியார் பெருநிறுவனங்களைப் போல செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியாதது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய்க் கிணறுகள் என்ற எமன் அதிக அளவில் அமைக்கப்பட்டது கடந்த 30 ஆண்டுகளில் தான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது திமுக தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதன்பிறகு அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சிக் காலங்களில் தான். அப்போது வளரத் தொடங்கிய ஹைட்ரோ கார்பன் பூதம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் 104 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முடிவு அங்குள்ள மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு  சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. இவ்விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’


                                       

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.