Skip to main content

எட்டுவழிச்சாலை திட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன்!; அன்புமணி ராமதாஸ் தாக்கு!!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
a

 

எட்டுவழிச்சாலைத் திட்டத்தால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன் தரும் என்று அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார். 


பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சி எம்பி அன்புமணி ராமதாஸ், திங்கள்கிழமையன்று (டிசம்பர் 24, 2018) சேலம் வந்திருந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்ட முதல்கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. தேர்தல் ஆதாயங்களுக்காக மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.


தமிழக அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் கொண்டு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது ஆளுங்கட்சி நடத்தும் நாடகம். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பயன் இல்லாமல் போய்விடும். இதற்கு தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சேலம் & சென்னை எட்டுவழிச்சாலை தேவை இல்லாதது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் இந்த திட்டத்தால் பயன் உள்ளது. 


மேட்டூர் உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். முதல்வர் அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார். ஆனால், அவருடைய அறிவிப்புகள் எதுவும் செயல்பாட்டில் இல்லை. சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக்கூடாது. இந்த உருக்காலைக்காக கையகப்படுத்தி, இதுவரை பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்குத் திருப்பித்தர வேண்டும். 


உயர்மின் கோபுரம், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட விவகாரத்தில் விவசாயிகளிடம் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். பொன்.மாணிக்கவேல் உண்மைகளை கண்டுபிடித்து வருகிறார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில்தான் அவரை மாற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுவரையில் நாங்கள் தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், எங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க முடியும். அதுவரை எங்களைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள்; கொடுக்கத் தயாராக உள்ளார்கள்” - அன்புமணி

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

“Borrow anywhere; They are ready to give” - Anbumani

 

எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தின் முதன்மை பிரச்சனை ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர்த் திட்டம். அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு காரணங்கள் வேண்டாம். தென்பெண்ணையில் ஆண்டுக்கு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளது. உபரி நீர் கடலில் கலக்கிறது. அதை இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும். இதுதான் நீர் மேலாண்மை. அடுத்த 5 ஆண்டுகளில் முதல்வர் 1 லட்சம் கோடியை நீர்மேலாண்மைக்குச் செலவிட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் இதுபோன்ற நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்

 

மேலும் பேசிய அவர், “2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு எங்கள் அறிவிப்பு வரும். பார் நடத்துவது அரசாங்க வேலை கிடையாது. அது சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அதை மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்கியுள்ளனர். எந்த சட்டத்தில் பார் நடத்தலாம் என்ற அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.