
பாமகவில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ்- ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், ''தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் ராமதாஸ் வருந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்கியதை என்னுடைய கட்சி நிர்வாகிகளும், நானும் கண்டு வருத்தம் அடைந்தோம். சமூக நீதி தளத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பணியாற்றி வந்த அரசியல் இயக்கம் பாமக. அந்தக் கட்சியில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சிறு குழப்பங்கள் தீர வேண்டும் என்று மனதார நாங்கள் விரும்புகிறோம். அந்த அடிப்படையில் ஒரு மன வருத்தத்தில் இருந்த ராமதாஸை என் சகோதரர் திருமால்வளவன் சந்தித்து உங்களால் வளர்ந்தவர்கள், உங்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள் என்ற ஆறுதலை தெரிவித்து வந்திருக்கிறார். அவ்வளவுதான் இந்த சந்திப்பின் காரணம். அதைத் தவிர வேறொன்றுமில்லை.

அதேநேரம் அன்புமணி ராமதாஸ் என்னை தொடர்பு கொண்டு ஏற்கனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்று என்னை அழைத்து தொலைபேசியில் பேசினார். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் என் மீது பூசப்பட்டது. ராமதாஸின் பொருளையும் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டேன். அன்புமணி ராமதாஸ் கொடுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து விட்டேன் என பல அவதூறுகள் கீழ் நிலையில் இருந்த தொண்டர்களால் எழுதப்பட்டது, பேசப்பட்டது. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் ராமதாஸ் என்னுடைய சகோதரர் திருமால்வளவனுடன் பேசி உள்ளார். அதேபோன்று அண்ணனாக அன்பு பாராட்டி, கடந்த கால கசப்புகளை மறந்து என்னுடன் எப்பொழுது வேண்டுமானால் பேசலாம் என அனைத்து கட்சி கூட்டத்தின் பொழுதும் என்எல்சி கூட்டம் நடந்த பொழுதும் என பல்வேறு பொது நிகழ்வுகளில் அன்புமணி ராமதாஸ் என்னிடத்தில் பலமுறை பேசியிருக்கிறார்.
பழமையை மறந்து என்னுடன் பேசு வேலு என என்னுடைய தோளை தட்டி என்னை கட்டிப்பிடித்தது ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுத்தது. சுமூகமான சூழ்நிலை எட்டப்பட்டதில் இருந்து ராமதாஸையோ அன்புமணி ராமதாஸையோ பாட்டாளி மக்கள் கட்சியையோ வன்னியர் சங்கத்தையோ நான் விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டேன். அவர்களுக்கு வழிவிட்டு பணி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் எங்களை வளர்த்தவர்களை சந்தித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக வேல்முருகன் பாமகவில் சேர்கிறார் என்றும், பாமகவில் அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸோடு பயணிக்க போகிறார் என்றும் செய்திகள் வெளியாகிறது. அது உண்மைக்கு மாறானது'' என்றார்.