Anbumani Condemn for Anna University decision

முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருந்தார். இது, கல்வியாளர்களிடமும் பொறியியல் மாணவர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்த நிலையில், இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., “திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருப்பது கவலையளிக்கிறது. இது உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் செயலாகும்.

Advertisment

நெல்லை வளாகத்தில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அண்ணா பல்கலை. கூறுவதை ஏற்க முடியாது. மாணவர் சேர்க்கை இல்லாததை காட்டி பள்ளிகளையே மூடக்கூடாது என வலியுறுத்தப்படும் சூழலில் பல்கலைக்கழக படிப்புகளை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

மாணவர் சேர்க்கை குறையும் பட்சத்தில் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவது தான் சரியான செயலாக இருக்கும். மாறாக, இருக்கும் படிப்புகளை நிறுத்துவது அண்ணா பல்கலைகழகத்திற்கு அழகு அல்ல.

நெல்லை வளாகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தப்பட்டால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிக்க சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டும். அதை தவிர்க்க நெல்லையில் முதுநிலை படிப்புகள் தொடர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.