நர்மதாவின் ’சன்பீம் பள்ளியில்’ பெண் அமைப்பில் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில் அரிய, சிறந்த நூல்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கப்படிருக்கின்றன. அங்கே நூல்களை வாசிக்க அமைதியான அறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலகத்தை ஆய்வறிஞர் முனைவர் நா.நளினிதேவி திறந்துவைத்தார். நிகழ்ச்சியை நர்மதாவின் புதல்வி தீபா, சிறப்பாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கினார். கவிஞர் அமுதா தமிழ்நாடன், தன் அறிமுக உரையில், நர்மதா பெண் அமைப்பைத் தொடங்கி நடத்துவது குறித்தும் மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சியைக் கொடுத்துவருவது குறித்தும் தன் அறிமுக உரையில் குறிப்பிட்டு, நர்மதாவின் முயற்சியைப் பாராட்டினார்.
வாழ்த்துரை வழங்கிய நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரான ஆரூர் தமிழ்நாடன் “சிறந்த நூல்களில் கை வைத்தவர்கள்தான் வெற்றிப் படிக்கட்டுகளில் கால் வைத்திருக்கிறார்கள். படைப்பாளர்கள் படைத்த நூல்கள் அவர்கள் வாழ்ந்த காலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. அவர்கள் வாழ்ந்த சமூகத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன. என்னை இப்படி பல படைப்பாளர்கள் அவர்கள் காலத்திற்குள் அழைத்துச்சென்றிருக்கிறார்கள். அவர்களோடு வாழவைத்திருக்கிறார்கள்.
வாழ்த்துரை வழங்கிய கவிஞர் உமாமோகனும் , நர்மதாவின் நூலக முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்.
தீபா
முனைவர் நளினிதேவி, நூல்களில் தான் ஒரு பட்டுப் பூச்சியாகவும், தும்பியாகவும் திளைத்து வருவதாகக் கூறித் தன் வாழ்த்துரையைக் கவிதையாக வழங்கினார். மேலும் பாடலாசிரியர் வேல்முருகன், கல்வியாளர் உமாகேஸ்வரி உள்ளிட்டோரும் கவிஞர் நர்மதாவைப் பாராட்டினர். கவிஞர் நர்மதா ஏற்புரையை நன்றியுரையாக ஆற்றினார்.
நிகழ்ச்சியில் முனைவர் பாட்டழகன், எழுத்தாளர் லதா, கவிஞர் மனோகரி மதன், த. இலக்கியன் உள்ளிட்ட படைப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கவிஞரின் மகன் இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்திருந்தவர்களை அன்போடு வரவேற்றனர்.
கவிஞர் நர்மதாவின் திருப்பணிகள் பாராட்டுக்குரியன.
தொகுப்பு: கதிரவன்
படங்கள்: ஒளிப்படக் காதலர்