jeya amrutha

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே பெங்களூர் அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அவர் மோசடி பேர்வழி என்றும் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்வதற்காக தன்னிடம் உடலை ஒப்படைக்கக்கோரி ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் பெங்களூரை சேர்ந்த எஸ்.அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஜெயலலிதவின் உறவினர்கள் என எல்.எஸ்.லலிதா, ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோரும் அம்ருதவின் வழக்கில் மனுதாரர்களாக உள்ளனர்.

Advertisment

இந்த வழக்க்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இருவருக்கும் இடையே உள்ள ரத்த சம்பந்தம் குறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யாமல் உடலை ஒப்படைப்பது சரியாக இருக்காது என தெரிவித்தார். அப்போது டி.என்.ஏ. சோதனைக்கு தயாராக இருப்பதாக அம்ருதா தரப்பும், அதற்க்கு ஆட்சேபனை தெரிவித்து அரசும் வாதிட்டனர். பின்னர் இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை வழக்கில் சேர்க்கபட்டு புதிய மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தீபக் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்; சைலஜா என்ற சகோதரியே ஜெயலலிதாவிற்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். தனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள் என்றும் வேறு யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதனிடையே, தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ளக்கோரி கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பிப்ரவரி 19ஆம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அம்ருதா, லலிதா, ரஞ்சனி ஆகியோர் தன் உறவினர்கள் அல்ல என ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்ததாகவும், அதுதொடர்பான உண்மை விவரங்களை கூறி, நீதிமன்றத்திற்கு உதவ தயாராக இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜெ.தீபா இன்று பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்துகளை கைப்பற்றவே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அம்ருதா மோசடி பேர்வழி என்றும் அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தனது பாட்டி சந்தியாவுக்கு அத்தை ஜெயலலிதாவும், அப்பா ஜெயக்குமாரும் மட்டுமே வாரிசுகள் என்றும் குறிபிட்டுள்ளார்.

இந்த வழக்கு நாளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.