வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து அம்பன் புயலாக உருவானது. கரோனா பாதிப்பு நெருக்கடிக்குள் இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த புயல் பெரும் சவாலாக அமைந்தது. இருப்பினும் புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் இன்று மேலும் 5 லட்சம் மக்களையும், ஒடிஷாவில் 1,58,640 மக்களையும் வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இதற்கிடையில் இன்று மாலை மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக அம்பன் புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்குவங்கம் வடக்கு - 24 பர்கனாஸ் பகுதியில் 5,550 வீடுகள் சேதம் அடைந்ததுடன், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.