Skip to main content

அமமுக பிரமுகர் கடத்தி கொலை; இருவர் கைது

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

AMMK Member passes away police arrested two

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் கோதண்டம் (68). அமமுக கட்சியில் மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். மேலும் பட்டு சேலை உற்பத்தியாளராகவும், பைனான்சிரியராகவும் உள்ளார். இவரது மனைவி குமாரி, மகன்கள் பாஸ்கர், சுரேஷ், மகள் பாரதி ஆகியோர் உள்ளனர்.

 

இவர் கடந்த 05.01.2023 அன்று முதல் காணவில்லை என்று கடந்த 07.01.2023 அன்று ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன கோதண்டம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர். பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின்பேரில் எஸ்.பி. கார்த்திகேயன் 5 தனிப்படைகளை அமைத்து தேடுவதற்காக உத்தரவிட்டார்.

 

பின்னர் தீவிர விசாரணையில் கோதண்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பாரி மகன் சரவணன்(33) என்பவருக்கு ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் தந்துள்ளதாக தெரியவந்தது. கொடுத்த பணத்தை கோதண்டம் கேட்டுவந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது ஓட்டுநர் அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் குமரன்(37) என்பவரிடம் கோதண்டம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார் என்று புலம்பியுள்ளார். இதற்கு குமரன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், அதற்காக முன்பணமாக ரூ. 2 லட்சத்தையும் வாங்கியுள்ளார். இந்நிலையில், குமரன் தனக்கு வேண்டப்பட்ட சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற தணிகாசலம் (44), நேருஜி (32) ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கோதண்டத்தின் போட்டோ மற்றும் செல்நம்பரை  கொடுத்து தீர்த்து கட்டுமாறு கூறியுள்ளார்.

 

இந்நிலையில் தணிகாசலம், நேருஜி ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், வினோத், வீரமணி ஆகியவர்களை தொடர்பு கொண்டு கோதண்டம் என்பவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று கூறி திட்டம் போட்டுள்ளனர். அதன்படி ‘காஞ்சிபுரம் பகுதியில் இடம் உள்ளது; விற்பனை செய்ய வேண்டும்’ என்று கூறி கடந்த ஜனவரி 5ம் தேதி கோதண்டத்தை செய்யாறு வரை வர வைத்துள்ளனர்.  அங்கிருந்து காரில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வழியாக சென்றுள்ளனர். போகும் வழியில் ஏற்கனவே திட்டம் போட்டது போல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு கோதண்டத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

 

பின்னர் வாலாஜாபாத், ஒரகடம், படப்பை, மண்ணிவாக்கம், மீஞ்சூர் வழியாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெலுங்கு கங்கா கால்வாயில் கோதண்டத்தின் பிரேதத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து கோதண்டம் உடல் கால்வாயில் மிதந்துள்ளது. சத்தியவேடு போலீசார் பிரேதத்தை மீட்டு போஸ்ட் மார்டம் செய்து புதைத்துள்ளனர். குட்டி (எ) தணிகாசலம், நேருஜி ஆகிய இருவரிடமும் கொலை செய்ததற்கான மீதி பணம் 4 லட்சம் ரூபாயை 07.01.2023 அன்று சரவணன் கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைகாரர்களை நெருங்கும் தகவல் அறிந்த சரவணன் ஆந்திராவில் குட்டி(எ) தணிகாசலம், நேருஜி ஆகிய இருவரையும் கோர்ட்டில் சரணடைந்து விடுங்கள் என் பெயரை சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். பிணம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தகவல் அறிந்த போலீசார் அப்பகுதி காவல்துறை உதவியுடன் பிணத்தை தோண்டி எடுத்து கோதண்டத்தின் மகனிடம் ஜனவரி 14ம் தேதி ஒப்படைத்தனர்.

 

கோர்ட்டில் சரணடைய வந்த இருவரையும் ஆந்திர போலீசார் அழைத்து சென்று கோதண்டனை கொலை செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆரணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர். ஜனவரி 15ம் தேதி சரவணன், குமரன், குட்டி (எ) தணிகாசலம், நேருஜி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த தலைமறைவாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், வினோத், வீரமணி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.