Skip to main content

'நான் தயார், நீங்கள் தயாரா? தமிழகத்திலும் அதைச் செய்வோம்...' - அரசு விழா மேடையில் அமித்ஷா சவால்!! 

Published on 21/11/2020 | Edited on 22/11/2020

 

amitsha in kalaivanar arangam

 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது (21/11/2020) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை வரவேற்றனர். முன்னதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், காணொளிக் காட்சி மூலமாக திருவள்ளூர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 61,843 கோடியில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல், கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். 309 கோடி மதிப்பில், சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

amitsha in kalaivanar arangam


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உலகில் மிகத் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாதது எனக்கு வருத்தமே. தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. கரோனாவிற்கு எதிராக அரசு மட்டுமல்ல, 130 கோடி மக்களும் போராடுகிறார்கள். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம், தேசிய அளவில் தமிழகத்தில் தான் அதிகம். கரோனா தடுப்பு மட்டுமல்ல நிர்வாகத் திறனிலும் தமிழகம்தான் இந்தாண்டு முதலிடம். நாடு முழுவதும் விவசாயிகளைக் கட்டுப்படுத்திவந்த இடைத்தரகர்களை நீக்கும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குத் தொடர்ந்து மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இழைத்திருக்கிறது எனக் கூறுவார்கள். நான் இங்கு சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், 10 ஆண்டுகள் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள், நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறீர்கள், எனப் பட்டியலிடுங்கள். எங்கள் தரப்பில் நான் மிகவும் பணிவோடு நாற்சந்தியில் நின்றுகொண்டு பட்டியல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? மிகுந்த நாட்களுக்குப் பிறகு சென்னை வந்திருக்கிறேன் எனவே அரசியல் பேசவும் விரும்புகிறேன். வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வருகிறது. தமிழகத்திலும் அதைச் செய்வோம். ஊழலைப் பற்றிப் பேச திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தேதி கொடுத்த அமித்ஷா; தயாராகும் தமிழக எம்பிக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Amitsha who gave the date; Preparing Tamil Nadu MPs

அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.