Skip to main content

“தமிழக மக்கள் திமுகவைத் தூக்கி எறியக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” - அமித்ஷா பேச்சு!

Published on 08/06/2025 | Edited on 08/06/2025

 

Amit Shah says The people of TN are waiting to overthrow the DMK

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளுக்கான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கில் இருந்தும் வந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். மதுரை மண்ணுக்கு  வந்த உடனே முதலில் நான் மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். சொக்கநாதர், கள்ளழகர், முருகனையும் தலை வணங்கி மகிழ்கிறேன். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களாகிய உங்களைச் சந்திக்கும் போது பெருமைக்குரிய தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியவில்லையே என்று என் வருத்தத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை சாதாரண நகரம் அல்ல. 3 ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றுப் பெருமை கொண்ட மிக முக்கியமான புனித இடம் ஆகும். இந்த மண்ணின் நாயகராக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும் நான் வணங்குகிறேன். ஜூன் 22ஆம் தேதி முருகனுக்கான பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அதையும் இந்த மண்ணிலே மிகச் சிறப்பாக நடத்தித் தர வேண்டுகிறேன். இந்த கூட்டமும் ஒரு மாற்றத்தை உருவாக்கும். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்பும். வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக - அதிமுகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் என்னுடைய காதுகளும் என்னுடைய சிந்தனைகளும் தமிழ்நாட்டின் மேல்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் சொல்கிறார் அமித்ஷாவால் திமுகவைத் தோற்கடிக்க முடியாது என்று அவருக்குச் சொல்கிறேன் அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தமிழக மக்கள் உங்களைத் தோற்கடிக்க இருக்கிறார்கள். அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய நீண்ட கால அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். மக்களின் நாடி துடிப்பை உணர்ந்தவனாகச் சொல்கிறேன் வரும் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவைத் தூக்கி எறியக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வடக்கிலே நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு மிகப்பெரிய எழுச்சியும், ஆதரவும் நாட்டுப்பற்றும் தமிழகத்தில் இருந்து ஆதரவு குரல் ஒளித்ததே அதை நான் நினைவு கூறுகிறேன்.

அப்பாவி பொதுமக்களை மதத்தின் பெயரால் நீங்கள் யார் என்று அடையாளப்படுத்தி கொடூரமாகக் கொலை செய்த தீவிரவாதிகளை முப்படைகளையும் திரட்டி  பிரதமர் மோடி  அவர்களின் ஊருக்குள்ளேயே புகுந்து அடித்தார் பாருங்கள் அதுதான் அவர்களுக்கு நாம் புகட்டிய பாடம். இதற்கு முன்னர் கூட தீவிரவாதிகள் எல்லாம் தங்கள் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் அப்போது எல்லாம் இத்தகைய வீர தீரமான செயல்பாட்டை எல்லாம் முந்தைய அரசுகள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பூரி ஆகட்டும், புல்வாமா ஆகட்டும், தற்போது நடந்திருக்கும் ஆபரேஷன் சிந்தூர் ஆகட்டும் நமது முப்படைகளும் ஒன்று திரண்டு இந்தியாவின் வீரத்தையும் தீரத்தையும் திறமையையும் நிரூபித்திருக்கிறது.

Amit Shah says The people of TN are waiting to overthrow the DMK

தீவிரவாதிகள் பதுங்கி இருந்த 100 கிலோ மீட்டர் அவர்களின் எல்லைக்குள் பறந்து சென்று தீவிரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து துல்லியமாகத் தாக்கி அவர்களின் இருப்பிடத்தை மண்ணோடு மண்ணாக்கியது இந்திய ராணுவம். பிரதமர் மோடியின் ஆட்சியிலே எல்லா முன்னேற்றங்களும் எப்படி இருக்கிறதோ அதுபோல ராணுவத்திலும் கூட ஆத்ம நிர்பர் என்று சொல்லக்கூடிய தன்னிறைவான ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த விவகாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே இந்திய விமானப்படை சாதனையைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்கள் எல்லாம் சொல்லை இப்போது விமானப்படையின் தையரித்தை உச்சரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தன்னுடைய ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் நம் மீது வீசத் தொடங்கிய போது இந்தியாவின் விமானப்படையின் வல்லமை உலக நாடுகளுக்கு எல்லாம் நிரூபிக்கப்பட்டது. அத்தனையையும் அடித்து தூள் தூளாக ஆக்கியது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். எனவே மறுபடியும் தீவிரவாதிகள் வாலை ஆட்டினால் அவர்களின் இடத்திற்குள் புகுந்து வீடு புகுந்து தாக்கி அவர்கள் அழிக்கப்படுவார் என்பதை இந்த நேரத்திலே நான் நினைவூட்டுகிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்