இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது (21/11/2021) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், நான் இங்கு சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், 10 ஆண்டுகள் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள், நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறீர்கள், எனப் பட்டியலிடுங்கள். எங்கள் தரப்பில் நான் மிகவும் பணிவோடு நாற்சந்தியில் நின்றுகொண்டு பட்டியல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? பல நாட்களுக்குப் பிறகு சென்னை வந்திருக்கிறேன் எனவே அரசியல் பேசவும் விரும்புகிறேன். வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வருகிறது. தமிழகத்திலும் அதைச் செய்வோம். ஊழலைப் பற்றிப் பேசத் திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது என்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமித்ஷா மீண்டும் லீலா பேலஸ் ஹோட்டலுக்குப் புறப்பட்ட நிலையில், அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பு முடிந்த நிலையில், தற்பொழுது தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.