Skip to main content

ஆம்பூரில் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட இரண்டு கடைகளுக்கு சீல்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கரோனா தொற்று பரவாமல் இருக்க ஆம்பூர் நகரம் முழுவதும் 100 சதவிதம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள வங்கி, கடைகள் எதுவும் இயங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 13- ஆம் தேதி முதல் ஆம்பூர் நகரம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனைத் தீவிரமாகக் கண்காணித்தும் வருகின்றனர்.
 

 

 

 

ambur area shops seal officers

 

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி பஜார் பகுதியில் மாவுமில்லும், வளையல்கார தெரு பகுதியில் செயல்பட்டு வந்த ஜெனரல் ஸ்டோர் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு மக்கள் கூட்டமாக வந்து நின்று இருந்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் காவல்துறை மூலமாக வருவாய்த் துறையினருக்குச் சென்றுள்ளது. உடனடியாக வருவாய்த்துறையினர் அங்குச் சென்று வந்த தகவல் உண்மையா? என ஆய்வு செய்தனர். உண்மை என தெரியவந்ததும், இதுப்பற்றி ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளிக்குத் தகவல் தந்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் தாசில்தார் செண்பகவள்ளி தலைமையில் வருவாய்த்துறையினர் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சீல் வைத்தனர்.

வாணியம்பாடி நகரமும் 144 தடை உத்தரவை 100 சதவிதம் கடைப்பிடிக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கும் தீவிரக் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் மோதல்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Clash between BJP members over distribution of election money

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.