ambur

Advertisment

ஆளும்கட்சி நகர செயலாளருக்கு பளார் விட்ட நிர்வாகி என்கிற தலைப்பில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அதிமுக நகர செயலாளராக உள்ள மதியழகன் என்பவரை அதே கட்சியை சேர்ந்த கூட்டுறவு சங்க வேளாண் விற்பனை குழு துணை தலைவராக உள்ள அன்பு என்பவர் அடித்ததாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தி தொடர்பாக நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் மதியழகன், கூட்டுறவு சங்க தலைவர் மணிக்கும் – கூட்டுறவு சங்க துணை தலைவர் அன்பு என்கிற அன்புநாதனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்துவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தான் அவர்கள் இருவரையும் அழைத்து நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு அவர்கள் இருவருக்கும் தான் வாய்தகராறு நடந்தது, யாரும், யாரையும் அடிக்கவில்லை. அங்கு நடந்ததை யாரோ தவறாக என்னை அடித்ததாக பரப்பியுள்ளார்கள். அமமுகவை சேர்ந்தவர்கள் சிலர் இருந்தனர், அவர்கள் தான் கூறியிருக்க வேண்டும்.

அன்புநாதனும் நானும் ஒன்றாக படித்தவர்கள், 45 வருட நட்பு எங்களுடையது. மணியும் என்னுடைய நண்பர். நான் நீண்டகாலமாக கட்சியில் பதவியில் இருப்பவன், எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான கோயிலை புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்திய குடும்பம் எங்களுடையது. இந்த மாவட்டத்தில் என்னைப்பற்றி அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சியினரிடம் கூட நட்பாக பழகக்கூடியவன் நான், என்னையெல்லாம் இங்கு யாரும் தொடக்கூட முடியாது என்றார்.