Skip to main content

ஆம்புலன்ஸ் மோதி டிவி மெக்கானிக் கொலை

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

ambulance van and two wheeler incident police investigation

 

விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் புதன்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் அக்ரஹாரப்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவசர ஊர்தி மோதியதில் உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

விபத்து குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அவசர ஊர்தி இரு சக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. வாகனத்தின் பதிவெண்ணை கொண்டு அவசர ஊர்தி ஓட்டுநரான ராமசாமி புறத்தைச் சேர்ந்த முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். 

 

தனது தொலைக்காட்சியைப் பழுது நீக்கித் தர 1,500 ரூபாய் பெற்றுக்கொண்ட சங்கரலிங்கம், பணியை முடிக்காத நிலையில், பணத்தையும் திருப்பித் தராததால் அவசர ஊர்தியை மோதிக் கொலை செய்ததாக முருகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர் முருகனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பக்கா ப்ளான்; ஆம்புலன்சை வைத்து அலப்பறை - கூண்டோடு தூக்கிய போலீஸ்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Police caught 10 youths who were involved in a bike race with an ambulance

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் இருந்து தென்காசி நோக்கி பைக் ரேசர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அதிவேகமாக திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கிக் கொண்டு வருவதாக தென்காசி மாவட்ட எல்லையான, சிவகிரி போலீசாரிடம் இருந்து தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தலைமையிலான போலீசார் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை பகுதியில் காத்துக் கொண்டிருந்தனர். 

 

அப்பொழுது, அதிவேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த நிலையில், அதனை மறித்த போக்குவரத்து போலீசார் தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை மறித்து விசாரணை நடத்திய போது அதில் வந்த 10 இளைஞர்கள் அனைவரும் சிவகாசி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு, முன்னதாக சிவகாசியில் இருந்து குற்றாலத்திற்கு மோட்டார் சைக்கிள் ரேஸ் செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். அப்பொழுது, திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையானது வாகன நெரிசல் மிகுந்த சாலை என்பதால் ரேஸ் செல்வது கடினம் என யோசித்த அந்த சில்லுவண்டுகள் விபரீதமாக திட்டமிட்டுள்ளனர். 

 

அதன்படி, ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி குற்றாலம் செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சொல்லியும், ஆம்புலன்சை சைரன் போட்டவாறு சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி செல்ல வைத்து, அதன் பின்னால் இளைஞர்களான சில்லுவண்டுகள் அனைவரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிவகிரி போலீசார் உடனே சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், கொத்தாக தென்காசி போக்குவரத்து போலீசார் அந்த சில்லுவண்டுகள் அனைவரையும் மடக்கி அவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும், மோட்டார் சைக்கிள் ரேஸ் செல்ல திட்டமிட்ட இளைஞர்கள் சட்டவிரோதமாக, அவசர சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

 

 

Next Story

துக்க வீட்டில் நடந்த விபரீதம்!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Tragedy in the house of mourning!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா. இவர் சென்னையில் நடைபாதை வியாபாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மஞ்சள் காமாலை நோய் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நேற்று (13-11-23) பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இந்த நிலையில், இவரது உடல் அவரது சொந்த ஊரான சாத்தனூருக்கு குளிர்சாதன பெட்டி மூலம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தேவா மறைந்ததையொட்டி அவரது உறவினர்கள் தேவாவின் உடலுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வந்தனர். இதில் தேவாவின் தம்பி பகவான், குளிர்சாதன பெட்டியை தொட்டு அழுதபோது திடீரென்று அவருக்கு மின்சாரம் தாக்கியது. 

 

அப்போது அருகில் இருந்த பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் அவரை காப்பாற்ற சென்ற போது அவர்களது உடல்களிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அனைவரும் மயக்கமடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர். துக்க விழாவுக்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.