Skip to main content

''அம்பேத்கர் சமத்துவத்துக்கான தலைவர்... மோடி சனாதனத்திற்கான தலைவர்...''- திருமாவளவன் பேச்சு

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

thirumavalavan speech

 

சிதம்பரம் அருகே விபிஷ்ணபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்துடன் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம், முதியோர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சிகளையும் திருமாவளவன் பார்வையிட்டார்.

 

இதனைத்தொடர்ந்து  அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்தியா முழுவதும் 18ந்  தேதி முதல் 22ந் தேதி வரை 'மஹா ஹெல்த் மேளா' என்ற பெயரில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடக்கிறது. இன்று சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கட்டணம் தொடர்பாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கல்விக்கட்டண அறிவிப்பு குறித்து அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கல்விக் கட்டணத்தை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

THIRUMA

 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அமைச்சர்களை அனுப்பி மசோதா குறித்து ஆளுநரிடம் கேட்கும் போது மசோதாவை எப்போது அனுப்புவோம் என கால வரையறை சொல்ல முடியாது என பதிலளித்திருக்கிறார். இது வேதனைக்குரியது. ஆளுநரை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்யப் பார்க்கிறது. ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படக்கூடிய ஆளுநர் என்பவர், மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குதான் ஆளுநர் பதவி. ஆனால் அதற்கு மாறாக மாநிலத்தில் குழப்பத்தையும், பதற்றத்தையும் அவர்களை வைத்து பாஜக செய்கிறது. பாஜக ஆட்சி செய்யாத தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் குழப்பங்களைச் செய்கிறது. ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதல்ல எங்களது கோரிக்கை. ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதுதான் எங்களின் கோரிக்கை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஒரு மீடியேட்டர் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து.

 

இளையராஜா மோடியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவரது கட்சியில் கூட சேர்ந்து கொள்ளட்டும் அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் அம்பேத்கரும், மோடியும் ஒரே வழியில் சிந்திக்கக் கூடியவர்கள் இல்லை. இவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பேசியதைத்தான் தவறு என்கிறோம். அம்பேத்கர் சமத்துவத்துக்கான தலைவர். மோடி சனாதனத்திற்கான தலைவர். அம்பேத்கர் மக்கள் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மோடி சனாதன சக்திகளுக்கு சேவை செய்பவர். இரண்டு பேரும் ஒரே நேர்க்கோட்டில் பொருந்தக் கூடியவர்கள் அல்ல. இரண்டு பேரும் இரு துருவங்களாக சிந்திக்கக் கூடியவர்கள். அதனால் இருவரையும் ஒப்பிடுவதை ஏற்க முடியாது சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனைவருக்கும் கனகசபையில் வழிபாட்டு உரிமை உண்டு. அந்த வழிபாட்டு உரிமை சட்டப்பூர்வமான உரிமைகளாக பாதுகாக்கப்பட வேண்டும்'' என திருமாவளவன் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.