Skip to main content

“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகள் திருச்சி மாவட்டத்தில் 8 கல்லூரியும் புதுக்கோட்டையில் ஒரு கல்லூரியும் மொத்தம் 9 கல்லூரிகள் உள்ளன. இக் கல்லூரிகளில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட ஊதிய விகிதம் தொடர்பான கோப்புகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருச்சி RJD அலுவலகத்திற்குக் கல்லூரிகள் முன்மொழிவுகளை அனுப்பி வைத்துள்ளன.

 

thiruchy

 

இந்தக் கோப்புகளில் பல கோப்புகள் OC என்னும் அலுவலக நகலில் கையொப்பம் பெறப்பட்டுள்ளன. FC எனப்படும் உண்மை நகல் கையொப்பமிடப்படாமல் கடந்த 2 மாதங்களாக RJD அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓய்வூதியம் பெறாமலும், ஓய்வூதியப் பலன்கள் தலா ஒரு ஆசிரியருக்கு 30 – 50 இலட்சம் வரை கிடைக்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த 3 மாதங்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தனித்தனியாக கோப்புகளின் நிலவரங்களை அறிந்து வர RJD அலுவலகம் சென்றால் இணைஇயக்குநரைப் பார்க்கச் சென்றால், “நான் ரொம்ப பிசி…. உதவி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் கணக்கு அலுவரைப் பாருங்கள்” என்றே பதில் வரும். கணக்கு அலுவலர் இரண்டு நாளில் கோப்புகள் கையெழுத்தாகிவிடும் என்று சொல்லி அனுப்பி வைப்பார். இதுநாள் வரை கோப்புகள் கையெழுத்திடப்படாமலே உள்ளன.

 

 

இந்நிலையில், இன்று (18.01.2018) பிற்பகல் 2.00 மணிக்கு ஓய்வுப் பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் பெலிசியா செல்வராணி தலைமையில், RJD அவர்களை நேரில் சந்தித்து முறையீடு செய்வதென சுமார் 20 ஆசிரியர்கள் RJD அலுவலகம் சென்றனர். RJD அவர்கள் வழக்கம்போல் கணக்கு அலுவரைச் சந்தியுங்கள். என்னைச் சந்திக்கவேண்டாம் என்று கூறியதாக அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 

பிற்பகல் 2.30 மணியளவில் பேராசிரியர் பெலிசியா செல்வராணி தலைமையில் கணக்கு அலுவலருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது கணக்கு அலுவலர் தெரிவித்த விவரங்கள் “இணைஇயக்குநர் வேறுபணியாக வெளியே சென்றுள்ளார்கள். ஓய்வூதியம் தொடர்பான அனைத்துக் கோப்புகளிலும் திங்கட்கிழமை கையொப்பம் வாங்கித் தருவாக” உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் இணை இயக்குநரிடம் வழங்கக் கொண்டுவந்த முறையீட்டு மனுவைக் கணக்கு அலுவலர் பெற்றுக்கொண்டு, இணை இயக்குநர் பார்வைக்கு வைப்பதாகவும் உறுதி அளித்தார். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் பெலிசியா செல்வராணி, “தமிழ்நாட்டில் உள்ள அனைதது மண்டலங்களிலும் 7 ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஓய்வூதியம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. திருச்சி மண்டலத்தில் மட்டும் புதிய ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகின்றது. இது ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் வாழ்வாரத்தைப் பாதிக்கும் செயல். இணைஇயக்குநர் உடனே கோப்புகளில் கையொப்பமிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

 

 

முறையீடு செய்யும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பேசும்போது, “எதிர்வரும் 23ஆம் தேதி வரை திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கையொப்பமிடுகிறார்களா? என்று பொறுத்திருப்போம். கையொப்பமிடாத நிலை நீடித்தால், சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநரைப் பணியிடமாற்றம் செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.