Skip to main content

“பேரறிவாளன் விடுதலை; ஒன்றிய அரசுக்கு மிகப்பெரிய சாட்டையடி” - எம்.எல்.ஏ  ஆளூர் ஷாநவாஸ் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Aloor Shanavas comment on Perarivalan release
கோப்புப் படம் 

 

“பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது” என்கிறார் விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ்.

 

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளூர் ஷாநவாஸ், “30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக அற்புதம் அம்மாள் என்கிற ஒற்றை தாயின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரு மகத்தான வெற்றியாக இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 

 

இன்னும் இதுபோன்று விடுதலை செய்யப்பட வேண்டியவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்த தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் என்கிற ஒற்றை மனிதரின் விடுதலை என்று சுருக்கி பார்த்து விட முடியாத அளவிற்கு இதில் மாநில அரசினுடைய அதிகாரம் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

 

குறிப்பாக அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அந்த பிரிவின் கீழ் மாநில அரசு ஒரு தீர்மானத்தை ஏற்றினாலோ, ஒரு சட்டமன்றம் கூடி முடிவு எடுத்தாலும் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் அதில் இருக்கிற ஒன்று. ஆனால், அதை அவமரியாதை செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தையே அவமரியாதை செய்யக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தன்னுடைய கருத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்திருக்கிறது.

 

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்றெல்லாம் இதில் பந்தாடி கொண்டிருந்த, விளையாடிக்கொண்டிருந்த ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது.

 

மாநில அரசின் அதிகாரமும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது‌. ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. பேரறிவாளனும் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு முப்பரிமான மகிழ்ச்சியை நமக்கு தருகிறது. இதில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது இவ்வளவு நாளும் நாம் சொல்லிக் கொண்டிருந்த அதே கருத்துதான், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; மாநில அரசினுடைய முடிவை ஏற்று செயல்பட வேண்டிய இடத்தில் இருப்பவர் ஆளுநர்.


முதலமைச்சரின் மொழியில் சொல்வதென்றால் ‘ஒரு போஸ்ட்மேன்.’  அது இந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அவர் போஸ்ட் மேன் தான். நம்முடைய சட்டமன்றம் தான் உயர்வானது, மதிப்பானது, அதிகாரம் மிக்கது என்பது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.