Alcohol at parties; Cancellation of special license; Tamil Nadu Government Notification

Advertisment

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்றுமதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியானது.

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், 'திருமண மண்டபங்கள், விளையாட்டுமைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். மாவட்ட ஆட்சியரும்மதுவிலக்கு துணை ஆணையர்களும்இதற்கான அனுமதியை வழங்குவார்கள். பி.எல்2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது. இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. இந்த சிறப்பு அனுமதிக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில், விருந்துகள், விழாக்கள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையை திருத்தப்பட்ட அறிக்கையில் இருந்து நீக்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்களில் நடைபெறும் தேசிய பன்னாட்டு நிகழ்வுகளிலும் உச்சி மாநாடுகளிலும்மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி உண்டு எனவும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் மைதானம் மற்றும் அரங்குகளில் மதுபானம் பரிமாற தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.