Skip to main content

மேலே காய்கறிகள்.. உள்ளே மது பாட்டில்கள்..! தமிழகத்திற்குள் நுழையும் லாரிகள்

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

Alcohol from other states to tamilnadu in corona lockdown time
                                                         மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் அரகண்டநல்லூர் தபோவனம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஈச்சர் லாரி ஒன்று அவ்வழியாக வந்துள்ளது. அதையும் மறித்து சோதனை செய்தனர். 

 

லாரியில், பெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஏற்றிவருவதாக அந்த வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இருந்தும் போலீசார் அதன் உள்ளே பிரித்து சோதனை செய்ததில் காய்கறி மூட்டைகளுக்கு மத்தியில் 81 அட்டை பெட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் இரண்டேமுக்கால் லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த ஈச்சர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மற்றும் உதவியாளரிடம் போலீசார் விசாரணை செய்ததில், திருக்கோவிலூர் அருகே உள்ள தனியாலம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது மகன் ரவி வயது 25 என்பதும், இவர் தமக்கு சொந்தமான லாரியில் பெங்களூரு சென்று காய்கறிகளை விற்பனை செய்துவருவதாக கூறி அங்கிருந்து மது பாட்டில்களைக் கடத்திவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

அவருக்கு உதவியாளராக கிளியூரைச் சேர்ந்த முருகன் மகன் அய்யனார் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரவி, அய்யனார் இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்கள் ஏற்றிவந்த மது பாட்டில்களையும் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்கள் கடத்தியவர்களை உடனடியாகச் சென்று வாகன சோதனையின் மூலம் கைதுசெய்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

 

இதேபோன்று பெங்களூருவில் இருந்து காய்கறி லாரியில் 120 மது பாட்டில்கள், 500 லிட்டர் சாராயம் ஆகியவற்றைக் கடத்தி வந்ததை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் பெரியவலை கூட்டு ரோட்டில் வாகன சோதனையின்போது மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர். மது பாட்டில் சாராயம் லாரியில் கொண்டு வந்த, துலங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், சிவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் (30.05.2021) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிவந்த லாரி ஒன்றைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 93 மதுபாட்டில் இருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மதுபாட்டில்கள் கடத்திவந்த லாரி டிரைவர் திருவெண்ணநல்லூர் அருகிலுள்ள அன்றாய நல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கடத்தல் சரக்குகள் தமிழகத்தில் மிக வேகமாக ஊடுருவிவருகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.