Skip to main content

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவு தினம்... அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி வாகன அணிவகுப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

alangkudi incident


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 7) வடகாடு கிராமத்தில் அவரது வீட்டில் வைத்தே ஒரு கும்பலால் வெட்டி சாயக்கப்பட்டார். கை துண்டானது. ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கார் ஓட்டுநரைக் காணவில்லை. இப்படிப் பல தடைகளைத் தாண்டி அவரது மகன் ராஜபாண்டியன் காரில் உயிருக்குப் போராடும் தந்தையை ஏற்றிக் கொண்டு துண்டான கையை காரின் முன்னால் வைத்துக் கொண்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரழந்தார்.

இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பல நாட்கள் போக்குவரத்து முடக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து வடகாடு வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்போடு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இந்தக் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடம் இன்றளவும் உள்ளது.

அதன் பிறகு, அவரது நினைவு நாளை குருபூஜையாக முத்தரையர் மக்கள் கடந்த 9 வருடங்களாக அணுசரித்து வருகின்றனர். அமைசர்கள், தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் குருபூஜைக்கு தமிழகம் முழுவதும் இருந்து வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும் அன்னதானம் வழங்குவதும் வழக்கம்.

 

alangkudi incident


இந்த நிலையில் இன்று 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த அவரது குடும்பத்தினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் குடும்பத்தினர் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதியளித்தும் மற்றவர்கள் கூட்டம் கூட அனுமதி ரத்து செய்தும் ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி உத்தரவிட்டார். மேலும், திருச்சி சரக டி.ஐ.ஜி ஆணிவிஜயா, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பிற்காக சுமார் 300 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

Ad

 

இந்த நிலையில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அஞ்சலியை தொடர்ந்து ஆலங்குடி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கம் கே.கே.செல்வகுமார் சுமார் 100 கார்கள், மோட்டார் சைக்கிள்களில் கோஷங்களுடன் கொடிப்பிடித்துக் கொண்டு சென்றனர். சில இடங்களில் செல்வகுமார் தரப்பினரை போலீசார் நிறுத்தி வாகனங்களில் கூட்டமாகச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள். ஆனால் தடையை மீறிச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தடையை மீறி வாகனங்களில் சென்றதால் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது