ADVERTISEMENT

அலங்காநல்லூரில் பரபரப்பு; வீரர்களுக்கும் மாட்டு உரிமையாளருக்கும் இடையே மோதல்

10:44 AM Jan 17, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டிலும் திருச்சி பெரிய சூரியூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது நடந்து வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பே அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. போட்டியில் அனைத்து மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து முனியாண்டி கோவில், அரியமலை கோவில், வலசை அம்மன் கோவில் காளைகள் ஆகியவை அவிழ்த்துவிடப்பட்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1000 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், போட்டி துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த போது காளை ஒன்றினை மாடுபிடி வீரர் அடக்கினார். மாடு பிடிமாடு என அறிவித்தும் அவர் நெடுநேரமாக காளையை விடாமல் இருந்தார். இதனால் கோபமடைந்த மாட்டின் உரிமையாளர் மாட்டினை விடச்சொல்லி களத்தில் கோபமாகக் கத்த, களத்தில் இருந்த மற்றொரு வீரர் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மைதானம் சற்று பரபரப்பு அடைந்தது. உடனே மற்ற வீரர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். போட்டி நடத்தியவர்கள் மாட்டுக்காரர்கள் எதுவும் பேசாதீர்கள் எனக் கூற மோதல் பெரிதாகாமல் முடிந்தது. அதே சமயம் மாடுபிடி வீரரும் மாட்டை விட்டு தள்ளி வந்துவிட அடுத்தடுத்த மாடுகள் களம் கண்டன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT