மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்பால் மீது பல வழக்குள் உள்ளது. மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் இருக்கும் வழக்கு சம்பந்தமாக ஆலந்தூர் மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது ஜான்பால்தான் மறைத்துவைத்திருந்த பிளேடால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டதோடு அந்த பிளேடை வாயிலும் போட்டு விழுங்கியுள்ளார். இந்நிலையில் அவர் வாயில் இருந்து இரத்தம் சொட்ட, நீதிமன்ற வளாகத்தினுள்ளே மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட காவல் துறையினர் ஆட்டோவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் கைதிக்கு எப்படி பிளேடு கிடைத்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தினால் நீதிமன்ற வளாகத்தினுள் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.