Skip to main content

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பனுக்கு போலீஸ் காவல்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Alagappan is under police custody for Actress Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். 

இந்த நிலையில், அழகப்பனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று (26-12-23) மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட அழகப்பனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதன் பேரில், போலீசார் அழகப்பனை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்