/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72365.jpg)
குடிசை வீட்டில் சாமி படத்திற்கு முன் ஏற்றப்பட்ட அகல் விளக்கிலிருந்து தீ பரவி 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரத்தில் இன்று நள்ளிரவில் 2 குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் இரண்டு குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தியதில் காந்திபுரம் மேடு பகுதியில், கண்ணையன் (65) என்பவர் தனது குடிசையில் சாமி படத்தின் முன்பு அகல் விளக்கில் தீபம் போட்டுள்ளார். அது காற்றின் வேகத்தால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் வீடு அருகே அங்கமுத்து (77) என்பவர் குடிசை வீடு உள்ளதால் இந்த தீ விபத்தில் அவர் வீடும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து நடந்த போது கண்ணையன் மற்றும் அங்கமுத்து ஆகியோர் அவரவர் வீட்டில் இருந்தனர். தீ விபத்து நடந்ததும் அவர்கள் குடிசையை விட்டு வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். எனினும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம், தள்ளுவண்டி, துணிகள், மரக்கட்டில்கள், மிதிவண்டி ஆகிவையும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)