Air pollution in Chennai is on the rise

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

Advertisment

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்திருந்தது. இந்த சூழலில் சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு முதல் மக்கள் பட்டாசுகளை வெடித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

Advertisment

அதே சமயம் இன்று காலை, சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்து இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுஇருந்தது. அதன்படி சென்னை பெருங்குடியில் - 178, அரும்பாக்கம் - 159, ராயபுரம் - 115, வேளச்சேரி - 117 எனச் சென்னையின் அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மணலியில் - 259, பெருங்குடி - 228, ஆலந்தூர் - 216, வேளச்சேரி - 209 என சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மேலும் மோசமாகியுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதே போன்று கும்மிடிப்பூண்டி - 255, செங்கல்பட்டு - 231, வேலூர் - 180, கடலூர் மாவட்டம் செம்மண்டலம் - 175 ஆக காற்றின் தரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே குறைந்த அளவாக நீலகிரி மாவட்டத்தில் காற்றின் தரம் 20 ஆகி பதிவாகியுள்ளது.