Skip to main content

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்... ஈரோட்டில் விமானப்படை அதிகாரி கைது!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

Air Force officer arrested in Erode

 

சமீபத்தில்தான் கோவை விமானப் படை முகாமில் பயிற்சிக்காக வந்த இளம்பெண்ணை விமானப் படை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த பரபரப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பான வழக்கில் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

 

தற்போது, பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் தசரா விடுமுறைக்காகப் பெங்களூருவிலிருந்து 13ஆம் தேதி மாலை புறப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு பெட்டியில் தனியாகப் பயணம் செய்தார். அதே முன்பதிவு பெட்டியில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படையில் ஹவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த 28 வயது பிரப்ஜோட் சிங் என்பவரும் பயணம் செய்தார். அப்போது தனியாகப் பயணம் செய்த அந்தப் பேராசிரியையிடம் பிரப்ஜோட் சிங் பேச்சு கொடுக்கத் தொடங்கினார். மத்திய அரசு அதிகாரி என்பதால் மரியாதை கொடுத்துப் பேசினார் அந்த இளம் பேராசிரியை. தொடர்ந்து பேசிய பிரப்ஜோட் சிங், பாலியல் ரீதியான வார்த்தைகளைச் சாதாரணமாகப் பேச தொடங்க, தவறான அர்த்தத்துடன் பேசுவதை உணர்ந்து பேசாமல் அவரது பெர்த்தில் படுத்துக்கொண்டார் அந்த இளம்பெண். ஆனால் விடாத அந்த விமானப் படை அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கினார். 

 

நள்ளிரவு நேரம் என்பதால் ரயிலில் மற்ற அனைத்து பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். பிரப்ஜோட் சிங் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டே வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் எல்லை மீறுவதை அறிந்த அந்தக் கல்லூரி பேராசிரியை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விமானப்படை அதிகாரியை எச்சரித்தார். ஆனால் அந்த அதிகாரி எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

 

udanpirape

 

அதுவரை அமைதி காத்திருந்த அந்த இளம் பேராசிரியை, ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்து நின்றதும் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கி, ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்தார்.

 

அதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்குச் சென்று விமானப்படை அதிகாரி பிரப்ஜோட் சிங்கை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வாருங்கள் அழைத்துள்ளனர். அதற்கு அந்த அதிகாரி, “நான் சென்டர் கவர்மென்ட் ஆஃபீசர் தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் கூப்பிட்டா எல்லாம் நான் வர முடியாது” என ரயில்வே போலீசாரை மிரட்ட, அந்த நபரை ரயிலைவிட்டு குண்டுக்கட்டாக தூக்கிவந்தனர். பிறகு அந்த நபரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் ஓடும் ரயிலில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் பாலியல் அத்துமீறல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் பிரட்ஜோட் சிங்கை கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

 

"சார் இதுபோன்று சில பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு புகார் கொடுக்கிறார்கள். ராணுவ அதிகாரி என்ற பெயரில் பலபேர் தனியாகவரும் பெண்களிடம் அத்துமீறுகிறார்கள். சில பெண்களை ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமையும் செய்துவிடுகிறார்கள். பயம், அவமானத்தில் சிலர் புகார் கொடுப்பதில்லை. ராணுவத்தினர், மத்திய அரசு ஆஃபீசர், ஸ்டேட் போலீஸ் எதுவும் செய்ய முடியாது என்று அதிகார வெறியால்தான் இப்படி அவர்கள் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள்." என்றனர் ரயில்வே போலீசார்.

 

மனித உரிமை மீறல், மக்கள் விரோதபோக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க இந்தியா முழுக்க ஒரே சட்டம்தான் என்பதை எல்லை மீறும் குற்றவாளிகள் உணர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.