AIIMS hospital nurse missing

சேலம் சிவதாபுரம் பெருமாள்கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் அழகு (53). இவருடைய மகள் மோனிஷா (25). இவர், ஹைதராபாத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர், கடந்த வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு பெற்றோரைக் காண்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். விடுப்பு முடிந்து அவர் மீண்டும் ஹைதராபாத் செல்வதற்காக, மே 27 ஆம் தேதி காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பினார்.

Advertisment

அவருடைய தம்பி, மோனிஷாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். ஹைதராபாத் சென்றதும் அலைப்பேசி மூலம் தகவல் அளிப்பார் என எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருடைய அலைப்பேசிக்கு அழைத்தபோது,அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து அழகு, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் தனது மகள் மோனிஷாவை காணவில்லை எனப் புகார் அளித்தார்.

Advertisment

ஆய்வாளர் ராணி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் எந்த இடத்தில் இறக்கிவிடப்பட்டார்.அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். மோனிஷாவை யாராவது கடத்திச் சென்றார்களா? காதல் விவகாரத்தில் தலைமறைவாகிவிட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.