
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பெரியார், அண்ணா குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவிற்கு அதிமுக கண்டம் தெரிவித்திருந்தது. அதேபோல் அம்மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு விளக்கத்தையும் கண்டனத்தையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் சென்னை வந்திருந்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

'முருகன் மாநாட்டில் அதிமுகவினர் கலந்து கொண்டது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம். அங்கு அமர்ந்திருந்தவர்கள் அமைதியாக இருந்தார்கள் என திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்' என்ற கேள்விக்கு, ''அதிமுக தலைமையில் இருக்கும் கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்ட காரணத்தினால் எதிரணியில் இருக்கும் ஸ்டாலின் பிதற்றிக் கொண்டிருக்கிறார்'' என்றார்.
'அதிமுக பாஜகவுடன் பயணிப்பது தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய துரோகம் என்று கனிமொழி சொல்லி இருக்கிறார்' என்ற கேள்விக்கு, ''முரசொலி மாறன் கடைசி வரை இலாகா இல்லாத மந்திரியாக வைத்திருந்தார்களே. அப்பொழுது எல்லாம் தெரியாத கனிமொழி அம்மையாருக்கு'' என்றார்.
'அதிமுக என்பது பாஜகவின் பண்ணை அடிமை என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''ஆர்.எஸ்.பாரதியே அந்த கட்சியில் ஒரு அடிமை தான். ஒரு அடிமை மற்றவர்களை பற்றி பேசுவது அருகதை இல்லை'' என்றார்.