Skip to main content

''எடப்பாடியை தவிர்த்து அதிமுக கூடிய சீக்கிரம் ஒன்று சேரும்''- ஓபிஎஸ் காதில் ஓதிய வைத்தியலிங்கம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

 "AIADMK will come together soon without Edappadi" - Vaidyalingam recited in OPS's ears

 

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப்  பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். பாஜக மாநிலத் தலைவரை மாற்றச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

 

பின்னர் செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் ''சார் மீண்டும் பழசெல்லாம் மறந்து அதிமுக ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா'' என கேள்வி எழுப்பினர். அதற்கு ''நாங்கள் அதிமுக ஒன்றுபட்டதால் வெற்றி என சொல்லிவருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி முடியாது முடியாது என சொல்லி இதுவரை 10 தோல்விகள் ஆகிவிட்டது'' என ஓபிஎஸ் சொல்லிக்கொண்டிருந்த பொழுது திடீரென ஓபிஎஸ் காதில் ஓதிய வைத்தியலிங்கம், பின்னர் செய்தியாளர்களை பார்த்து ''எங்களுடைய கணிப்பு எடப்பாடியை தவிர்த்து அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒன்றிணையும், கூடிய சீக்கிரத்தில். அது எங்களுடைய கணிப்பு'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
ADMK Executive Committee, General Committee meeting date announcement

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii) படி, வருகின்ற செவ்வாய் கிழமை (26.12.2023) காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’- இ.பி.எஸ் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Judges refused to accept the reasons given by edappadi Palaniswami in the Kodanad case

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தன்னை தொடர்புபடுத்தி தவறாக வீடியோ வெளியிட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அந்த வழக்கில் ரூ. 1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தன்னால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதிலிருந்து விலக்களிக்கவேண்டும் என்றும், அத்தோடு, தனது வீட்டிலேயே வந்து வழக்கறிஞர் ஆணையர் ஒருவர் வந்து சாட்சியங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தனிநீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்று சாட்சியங்களைப் பெற வழக்கறிஞர் ஆணையராக எம்.கார்த்திகேய பாலனை நியமித்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பத்திரிகையாளர் மேத்யூ தாமஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃவிக் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதனடிப்படையில் நீங்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், காலில் ஏற்பட்ட காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோருவது என்று கூறினர். உடல்நிலை காரணங்களைத் தவிர வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று கூறிய நீதிபதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தங்களது தரப்பு வாதங்களை எடுத்துக்கூற வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.