திமுக ஆட்சிக்கு வந்தபின் முதன்முறையாக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம்; சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி; கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்; திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்; கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு; சென்னை கே.கே.நகரில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.