Skip to main content

“திமுக பேனர் மீது அதிமுக போஸ்டர் ஒட்டப்படும்” - முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

"AIADMK poster will be pasted on DMK banner" - Former Minister warns

 

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நேற்று (17.12.2021) நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் கண்டன உரையாற்றினார்.

 

அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சி அமைத்து மக்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமும் முழுமையாக செய்யவில்லை. குறிப்பாக பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் என சொல்லிக்கொள்ளும் திமுகவினர், திருச்சி மாநகரைப் பொறுத்தவரை திமுக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு மாநகர் முழுவதும் பேனர் ஒட்டிவருகின்றனர். காவல்துறையினர் திமுகவின் பேனரை அகற்றவில்லை என்றால் திமுகவின் பேனர் மீது அதிமுக போஸ்டர் ஒட்டப்படும் என எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

 

மேலும், அதிமுக சார்பில் பெட்ரோல் - டீசல் மீதான மாநில வரியைக் குறைக்கக் கோரியும், கட்டுக்கடங்காத அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைத்திட கோரியும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரியும், அம்மா கிளினிக் திட்டத்தை திமுக அரசு மூட நினைப்பதைக் கைவிடக் கோரியும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், மழையினால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

 

சார்ந்த செய்திகள்