![AIADMK official arrested for misbehaviour Incident happened to the girl in tiruppur](http://image.nakkheeran.in/cdn/farfuture/VezuiRpJv3XHikeNYVOKlx-BKUaDUzoyBHEL8CGcZns/1710295167/sites/default/files/inline-images/inve%20ni_10.jpg)
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவிலில் தேரோட்டத் திருவிழா கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அதனையொட்டி, அதே பகுதியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கலை நிகழ்ச்சியை காண, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர். அந்த வகையில், இந்த கலை நிகழ்ச்சியை காண அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியும், அவரது தாயும் வந்துள்ளனர்.
இந்த நிலையில், இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சி முடிய காலதாமதமானதால், சிறுமியை அவரின் தோழியுடன் விட்டுவிட்டு தாய் மட்டும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும், தனது மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த தாய், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு சென்று தேடிபார்த்துள்ளார். இரவு முழுக்க எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த சிறுமியுடன் தாய் விசாரித்த போது, நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலும் தன்னை கடத்தி அங்குள்ள தோட்டத்துக்கு கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த வெள்ளக்கோவில் போலீசார், சிறுமியை வன்கொடுமை செய்த காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் (32), செம்மாண்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்த நிலையில் மேலும் 5 பேரை கைது செய்தனர். இதனையடுத்து, அதிமுக ஐ.டி விங் நிர்வாகி தினேஷ், சதிஷ், நவீன்குமார், நந்தகுமார், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில், தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர். கலை நிகழ்ச்சியை காண சென்ற சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.